அகமதாபாத்: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுடன் நேரடியாக மோதியது தொடர்பாக குஜராத் அணிக்காக ஆடி வரும் தமிழக வீரர் சாய் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். ஹர்திக் பாண்டியா தனது சிறந்த நண்பர் என்று கூறிய அவர், களத்தில் அப்படி இருக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் பவுலிங் செய்யும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணம் என்று கூறிய அவர், இதனை தீவிரமாக சிந்திக்காமல் சீண்டல் என்று மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த போட்டியின் போது தமிழக வீரர் சாய் கிஷோர் மற்றும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நேரடி மோதலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 15வது ஓவரை சாய் கிஷோர் வீசிய போது, 5வது பந்தை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டார். அந்த பந்து டாட் பாலாக மாறிய போது, ஹர்திக் பாண்டியா தேவையில்லாத வார்த்தைகளை முனுமுனுத்தார்.
இதனால் டென்ஷனான சாய் கிஷோர், அங்கு நின்று கொண்டே ஹர்திக் பாண்டியாவை முறைத்து பார்த்தார். அதற்கு ஹர்திக் பாண்டியாவும் முறைத்து பார்க்க, "போ டா" (Go away) என்று கூறினார். அப்போதும் சாய் கிஷோர் முறைக்க, சூழல் பரபரப்பானது. பின்னர் நடுவர்கள் வந்து சூழலை இயல்பாக்கினர். ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் சாய் கிஷோர் விளையாடி இருக்கிறார்.
ஆனாலும் முன்னாள் கேப்டன் உடனேயே சாய் கிஷோர் மோதி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதல் தொடர்பாக சாய் கிஷோர் பேசுகையில், ஹர்திக் பாண்டியா எனது நல்ல நண்பர். ஆனால் களத்திற்குள் நட்புக்கு இடம் கிடையாது. யார் எதிரில் நின்று விளையாடினாலும், இப்படிதான். அதற்காக இதுபோன்ற விஷயத்தை அதிகமாக சிந்தித்து யோசிக்க தேவையில்ல்லை.
எங்களுக்கு இடையில் நல்ல போட்டி இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளின் போது இப்படி நடப்பது இயல்புதான் என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டிக்கு பின் வீரர்கள் கைகுலுக்கிய போது, சாய் கிஷோர் - ஹர்திக் பாண்டியா இருவரும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினர். ஹர்திக் பாண்டியா சிரித்து கொண்டே சாய் கிஷோரை பாராட்டி சென்றார்.