மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் தோல்வியை சந்தித்தது. மும்பை அணியின் இந்த தோல்விக்கு கடைசி ஓவரை தீபக் சஹர் வீசியதே காரணமாக பார்க்கப்படுகிறது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசாமல், தீபக் சஹர் வீசியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டிஆர்எஸ் விதியின் கீழ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலை வந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் அணி டிஆர்எஸ் விதிப்படி 4 ரன்கள் குறைவாக சேர்த்திருந்தன.

இதன்பின் மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது, குஜராத் அணி 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி முடித்திருந்தனர். இதனால் கடைசி ஓவரை வீச ஹர்திக் பாண்டியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் தீபக் சஹர் பழைய பந்தில் பவுலிங் செய்யும் போது, கூடுதலாக ரன்களை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஹர்திக் பாண்டியா பல்வேறு தருணங்களிலும் கடைசி ஓவரை வீசி இருக்கிறார். ஆனாலும் தீபக் சஹர் கையில் பந்து கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்லாட்டில் வீச, ராகுல் திவாட்டியா பவுண்டரி விளாசினார். தொடர்ந்து கோட்ஸி-க்கு ஒரு பந்து ஸ்லாட்டில் வீசப்பட்ட போது, சிக்ஸ் அடித்து அசத்தினார். இவற்றை கடந்தாலும் கூட அசால்ட்டாக நோ-பால் ஒன்றை வீசினார்.
அதுதான் மும்பை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார் என்று சொல்லலாம். ஏனென்றால் அர்ஷத் கான் அடித்த பந்து கையில் கிடைத்த பின், உடனடியாக சூர்யகுமார் யாதவ் கைகளுக்கு த்ரோ அடித்திருக்கலாம். அதனை விடுத்து நேரடியாக ஸ்டம்பிற்கு குறி பார்த்தது மும்பை அணியின் தோல்விக்கு காரணமாகியது.
இதனால் கடைசி ஓவரில் மும்பை அணி சரியான திட்டத்துடன் களமிறங்காததும், ஹர்திக் பாண்டியா எடுத்த மோசமான முடிவுகளுமே காரணமாக அமைந்துள்ளது. இதனால் மும்பை அணி அடுத்த 2 போட்டிகளில் 2லும் வென்றால் மட்டுமே எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அடுத்த 2 போட்டிகளில் மும்பை அணி பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது.