மும்பை: டி20 கிரிக்கெட்டில் பவுலர்கள் நோ-பால் வீசுவது மாபெரும் குற்றம் என்று மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விமர்சித்துள்ளார். கடைசி ஓவரில் வீசப்பட்ட நோ-பால் ஆட்டத்தின் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஹர்திக் பாண்டியா, குறைந்த ஸ்கோரை பதிவு செய்தாலும் கடைசி வரை போராடியதற்கு பவுலர்களே காரணம் என்றும் கூறியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் தோல்வியை சந்தித்துள்ளது. குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவையாக இருந்த போது, ஹர்திக் பாண்டியா கைகளில் பந்தை அடித்துவிட்டு அர்ஷத் கான் ஒரு ரன்னை எடுக்க ஓடினார். அப்போது ஹர்திக் பாண்டியா நேராக ஸ்டம்பை நோக்கி பந்தை த்ரோ அடிக்க, அது ஸ்டம்பை மிஸ் செய்தது.

இதனால் எளிதாக குஜராத் அணி 1 ரன் எடுத்து த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் குஜராத் அணியின் பேட்டிங்கின் போது 2 முறை மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இறுதியாக ஒரே ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தீபக் சஹர் மோசமாக பவுலிங் செய்தார்.
இதனால் மும்பை அணி கையில் இருந்த வெற்றியை பறிகொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணி 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்த நிலையில், அந்த அணிக்கு வெற்றிப் பயணத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இந்த தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.
ஒரு குழுவாக இணைந்து வெற்றியை நோக்கி போராடினோம். நிச்சயமாக இந்த பிட்சில் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க முடியும். எனது கணிப்பின்படி மும்பை அணி 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டது. ஆனாலும் இவ்வளவு அருகில் வந்து தோல்வியை பெறுவதற்கு பவுலர்கள்தான் காரணம். இந்த போட்டியில் கேட்ச்களை விடவும், நோ-பால்களை அதிகமாக வீசிவிட்டோம் என்று நினைக்கிறேன்.
அதிலும் கடைசி ஓவரில் நோ-பால் பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டில் நோ-பால்களை வீசுவது பெருங்குற்றம் என்று கருதுவேன். ஏனென்றால் நோ-பால் மூலம் சேர்க்கப்படும் ரன்கள் நிச்சயம் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் மும்பை அணியின் அத்தனை வீரர்களும் 120 சதவிகிதம் தங்களின் பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏனென்றால் குறைந்த ஸ்கோரை அடித்திருந்தாலும், கடைசி வரை போராடியுள்ளோம். மழை தொடர்ந்து கொண்டே இருந்தது. 2 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டு தொடங்கியது சரியாக அமையவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் மும்பை அணி பவுலர்கள் மொத்தமாக 3 நோ-பால்களை வீசியுள்ளனர். அதில் ஹர்திக் பாண்டியா 2 நோ-பால்கள் வீசியது குறிப்பிடத்தக்கது.