MI vs GT: மும்பை அணியில் ரோகித் சர்மா பங்கேற்பதில் சந்தேகம்.. கோலி ஃபார்முலாவை பின்பற்ற திட்டம்
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தசைப் பிடிப்பு காயம் ஏற்பட்டுள்ளதால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஏற்கனவே சவால்கள் நிறைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ரோகித்தின் காயம் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இக்காயம் ஏற்பட்டது. ரோகித் தனது உடற்தகுதியை பரிசோதிக்க நரேந்திர மோடி மைதானத்திற்கு அணியுடன் முன்கூட்டியே சென்றார். தசைப் பிடிப்பு குணமடைய எட்டு நாட்கள் தேவைப்படும் என்பதால், திங்கட்கிழமை அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனத் தெரிகிறது.

இதனால் கோலியை போல் இம்பேக்ட் பிளேயராக ரோகித் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கலாம். பெங்களூரு அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது, ரோகித் தன் தொடைப்பகுதியில் அசௌகரியம் உணர்ந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ரோகித் இல்லாதது அணிக்கு பின்னடைவானது.
காயமடைவதற்கு முன் வரை, ஆட்டத்தின் பெரும்பகுதியிலும் பெங்களூரு அணியின் முழு இன்னிங்ஸிலும் ரோகித் சாதாரணமாகவே ஃபீல்டிங் செய்தார். ஆனால், ஐந்தாவது ஓவரின் நான்காவது பந்தில் லெக்-பை ரன் ஓடும்போது அவருக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டது. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்த அவர், சிகிச்சை பெற்றார். எனினும், அசௌகரியம் தொடர்ந்ததால், மேலும் இரண்டு பந்துகளை எதிர்கொண்டவுடன் களத்தை விட்டு வெளியேறினார்.
நடப்பு ஐபிஎல் சீசன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகுந்த ஏமாற்றத்துடனேயே தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் 13 வருட தோல்விப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றிக் கணக்கைத் தொடங்கினாலும், அதன்பிறகு தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருகின்றன.
இந்த சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. பவர்-பிளேயில் மெதுவான ரன்கள், நிலையற்ற மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் மோசமான பந்துவீச்சு என பல்வேறு சிக்கல்கள் அணியின் மோசமான சீசனை மேலும் தீவிரமடையச் செய்துள்ளன.


Click it and Unblock the Notifications