மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 89 ரன்களை சேர்த்திருந்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் வெறும் 66 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். வான்கடே மைதானத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால், சுப்மன் கில் இந்த முடிவை எடுத்தார். இதன்பின் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா தொடக்கம் கொடுக்க, குஜராத் அணிக்காக முகமது சிராஜ் முதல் ஓவரை வீசினார்.

அவர் வீசிய 2வது பந்திலேயே ரிக்கல்டன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அர்ஷ்த் கான் வீசிய 4வது ஓவரில் ரோஹித் சர்மாவும் 7 ரன்களில் வெளியேறினார். இதன்பின் வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய உடன், பிரசித் கிருஷ்ணா வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
அந்த ஓவரிலேயே அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் சாய் கிஷோர் கோட்டைவிட்டார். தொடர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகளை விளாச, 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 56 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் ஸ்பின்னர்களான சாய் கிஷோர் - ரஷீத் கான் கூட்டணியை அட்டாக்கில் கொண்டு வந்தார் சுப்மன் கில்.
ஆனாலும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து அசத்த, மும்பை அணி 10 ஓவர்களில் 89 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் சிக்ஸ் அடித்து 29 பந்துகளில் அரைசதத்தை எட்ட, அடுத்த 2 பந்துகளிலேயே சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் ரஷீத் கான் வீசிய அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் 53 ரன்களில் வெளியேறினார்.
பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 1 ரன்னிலும், திலக் வர்மா 7 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் சில ஓவர்களில் மும்பை அணி ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், நமன் திர் அதிரடியாக விளையாட முயற்சித்து 7 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் கார்பின் பாஸ்ச் - தீபக் சஹர் கூட்டணி இணைந்தது.
கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கார்பின் பாஸ்ச் 27 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. முதல் பாதியில் புலியாக விளையாடிய மும்பை அணி, இரண்டாம் பாதியில் பூனையாக மாறி வெறும் 66 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. இதனால் மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.