மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடி தமிழக வீரரான சாய் கிஷோர் 4 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்த சீசனில் சாய் கிஷோருக்கு பவுலிங் செய்ய அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. தற்போது தனது பவுலிங் மூலமான வான்கடே மைதானத்தில் கொடி நாட்டி அசத்தி இருக்கிறார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். டாஸின் போதே குஜராத் அணியில் பவுலிங் வாய்ப்புகள் தனக்கு அதிகமாக இருப்பதாகவும், சாய் கிஷோரை தேவையான நேரத்தில் பயன்படுத்துவோம் என்று சூசகமாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மும்பை அணி தரப்பில் ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ரிக்கல்டன் 2 ரன்களிலும், ரோஹித் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழக்க, வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவருமே வான்கடே பிட்ச் மற்றும் ஃபீல்டிங்கை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை விளாசி தள்ளினர்.
இதனால் 7வது ஓவரிலேயே சாய் கிஷோரை அட்டாக்கில் கொண்டு வந்தார் சுப்மன் கில். முதல் ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 10 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில், தொடர்ந்து வீசிய 9வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இரு பேட்ஸ்மேன்களுமே சாய் கிஷோரை அட்டாக் செய்வதில் சிறு தடுமாற்றத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் 11வது ஓவரில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் மீண்டும் வீசிய 13வது ஓவரில் ஹர்திக் பாண்டியா டாப் எட்ஜாகி 1 ரன்னில் வெளியேறினார். இதனால் சாய் கிஷோர் 4 ஓவர்களில் 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்திய பின், அடுத்தடுத்த மும்பை அணியின் மிடில் ஆர்டர் சரிந்தது. 97 ரன்கள் இருந்த போது சூர்யகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேறிய நிலையில், அடுத்த 16 ரன்களில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இதனால் மும்பை அணியின் சரிவுக்கு சாய் கிஷோர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனால் தமிழக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.