மும்பை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இரு தொடக்க வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், கொஞ்சம் பதற்றமின்றி அதிரடியாக அரைசதத்தை விளாசி அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது.

இதன்பின் மும்பை அணி தரப்பில் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. குஜராத் அணி தரப்பில் முகமது சிராஜ் முதல் ஓவரை வீசினார். இவர் வீசிய 2வது பந்திலேயே ரிக்கல்டன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அர்ஷத் கான் பவுலிங்கில் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மும்பை அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது. பவர்பிளேவை பயன்படுத்தி வில் ஜாக்ஸ் அதிரடியாக பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இவரை வீழ்த்துவதற்காக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்த போதும், வில் ஜாக்ஸ் கொஞ்சம் கூட அசரவில்லை. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர், 29 பந்துகளில் சிக்சர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் மிடில் ஓவர்களில் அட்டாக் செய்ய முயற்சித்து, 35 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். மும்பை அணி இரு தொடக்க வீரர்களை இழந்து தடுமாறிய போது, பொறுப்பை எடுத்துக் கொண்ட வில் ஜாக்ஸ், மும்பை அணியை சிறப்பாக கரை சேர்த்திருக்கிறார்.
இதனால் மும்பை அணி ரசிகர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் வில் ஜாக்ஸ்-ஐ விட்டுக் கொடுத்ததற்காக ஆகாஷ் அம்பானி எழுந்து சென்று ஆர்சிபி அணி நிர்வாகிகளை கட்டிப்பிடித்து கையை கொடுத்தது ஏன் என்று இப்போது புரிகிறா என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.