மும்பை: லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியது ஆட்டத்தை மும்பை அணி பக்கம் திருப்பியதாக வில் ஜாக்ஸ் தெரிவித்துள்ளார். பும்ராவை அற்புதமான பவுலர் என்று கூறிய வில் ஜாக்ஸ், வலைப்பயிற்சியில் அவரை எதிர்கொள்வதே கடினமாக இருப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை விளாசியது. இதன்பின் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் மூலமாக மும்பை அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்று புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பாக மும்பை அணி தொடர்ச்சியாக 5 லீக் போட்டிகளில் வென்ற போது, 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனால் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் லக்னோ அணியை முதல்முறையாக லீக் போட்டியில் வீழ்த்தி மும்பை அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வில் ஜாக்ஸ் அமைந்தார். ஏனென்றால் அபாயகரமான வீரரான நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை முதல் பந்திலேயே வீழ்த்தியதோடு, கேப்டன் ரிஷப் பண்ட் விக்கெட்டையும் அதே ஓவரில் வீழ்த்தி மும்பை அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்.
இதனால் வில் ஜாக்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வில் ஜாக்ஸ் பேசுகையில், முதலில் நானொரு பேட்ஸ்மேன். பார்ட் டைம் பவுலராகவே இருந்திருக்கிறேன். எனது பவுலிங் எனக்கு மட்டுமல்லாமல், மும்பை அணிக்கும் முக்கியம். பவுலிங்கில் தொடர்ந்து கடுமையாக பணியாற்றி வருகிறேன். இதனைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்பட போவதில்லை.
பவுலிங்கில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது உண்மைதான். மும்பை அணியில் ஆடும் அனைவருக்கும் பூரன் மற்றும் பண்ட் விக்கெட்டின் முக்கியத்துவம் நன்றாக தெரியும். பூரனின் விக்கெட்டை வீழ்த்திய பின், என் பணி முடிந்துவிட்டது. இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அதிகமாக பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அதனை ரசிக்கிறேன்.
மும்பை அணியில் உள்ள ஒவ்வொருவரும் என்னை குடும்ப உறுப்பினரை போல் உணர வைக்கிறார்கள். ஒரு அணியாக இணைந்து ஃபார்முக்கு வந்து கொண்டிருக்கிறோம். இதனை தொடர வேண்டும். பும்ரா எப்போதுமே அற்புதமான பவுலர். வலைப்பயிற்சியில் பும்ராவை எதிர்கொள்வதே கடினமாக உள்ளது. பும்ரா எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி. அவரின் செயல்பாடுகளை கவனிப்பதே அற்புதமான அனுபவமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.