மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட ரோஹித் சர்மா, அடுத்த 3 பந்துகளில் மயங்க் யாதவின் பொறியில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் லக்னோ அணியின் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மயங்க் யாதவ் கொண்டு வரப்பட்டார்.

கடந்த 8 மாதங்களாக காயத்தில் இருந்த மயங்க் யாதவ் என்சிஏவில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் என்சிஏவிலேயே மீண்டும் காயம் ஏற்பட, ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 போட்டிகளுக்கு முன்பாக லக்னோ அணியுடன் மயங்க் யாதவ் இணைந்தார்.
ஆனாலும் மயங்க் யாதவ் அந்த அணியால் களமிறக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் மயங்க் யாதவ் களமிறங்கியதால், அவரின் செயல்பாடுகள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன்பின் மும்பை அணி தரப்பில் ரிக்கல்டன் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் மயங்க் யாதவ் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 3வது ஓவர் வீச அழைக்கப்பட்டார். அதில் ரோஹித் சர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, மீண்டும் 2வது பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால் ஹிட்மேன் ரசிகர்கள் கொம்பன் இறங்கிட்டான் என்று உற்சாகமாகினார்கள். ஆனால் அடுத்த 2 பந்துகளை மயங்க் யாதவ் சரியான லெந்தில் பிட்ச் செய்து ரன்களை நிறுத்தினார்.
இந்த நிலையில் 5வது பந்தை மயங்க் யாதவ் வேகத்தை குறைத்து 120கிமீ வீச, ரோஹித் சர்மா ஆசைப்பட்டு ஷார்ட் தேர்டு மேன் திசையில் அடித்தார். அது நேராக பிரின்ஸ் யாதவ் கைகளில் விழுந்து கேட்சானது. இதனால் அடுத்தடுத்து 2 சிக்ஸ் விட்டுக் கொடுத்தாலும், மயங்க் யாதவ் மாஸ் கம்பேக்கை கொடுத்து தனது வருகையை அறிவித்துள்ளார்.