மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை விளாசி இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி 200 ரன்களை விளாசிய போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியை சந்தித்ததே இல்லை. இதனால் லக்னோ அணி புதிய வரலாறு படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளும் விளையாடிய போட்டியில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணிக்காக ரிக்கல்டன் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

ரோஹித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி தொடங்கிய நிலையில், மயங்க் யாதவ் பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் வில் ஜாக்ஸ் - ரிக்கல்டன் கூட்டணி இணைந்தது. இதில் வில் ஜாக்ஸ் நிதானம் காக்க, ரிக்கல்டன் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார். அதிலும் திக்வேஷ் ராத்தீ வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 19 ரன்களை விளாசி தள்ளினார்.
இதனால் மும்பை அணி 6 ஓவர்களில் 66 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 25 பந்துகளில் அரைசதம் அடிக்க, ரிக்கல்டன் அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் திக்வேஷை மீண்டும் அட்டாக் செய்ய முயன்ற ரிக்கல்டன் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேற, உடனடியாக சூர்யகுமார் யாதவ் களம் புகுந்தார்.
இதனால் மைதானத்தை சுற்றி சுற்றி சூர்யகுமார் சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து கட்டினார். இதன்பின் வில் ஜாக்ஸ் 29 ரன்களில் போல்டாகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியில் பொளந்து கட்டினார். ஓவருக்கு ஒரு சிக்ஸ், பவுண்டரி செல்வதை லக்னோ அணி பவுலர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இதனிடையே திலக் வர்மா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனாலும் அதிரடியை கைவிடாத சூர்யகுமார் யாதவ், 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால் அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, மும்பை அணி 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதனைத் தொடர்ந்து 19வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட, கடைசி ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை குவித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்து மும்பை அணி ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. இதனால் மும்பை அணிக்கு 6வது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.