லக்னோ: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். இதை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துக்கு எதிராகவும், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர். மேலும், ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகுமாறும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கிய போது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை அறிவித்தார். அப்போது ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தார். இம்பேக்ட் வீரராகக் கூட அவர் சேர்க்கப்படவில்லை.

பயிற்சி செய்தபோது ரோஹித் சர்மாவுக்கு முழங்காலில் அடிபட்டதாக விளக்கம் கூறினார் ஹர்திக் பாண்டியா . ஆனால், இதை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். ரோஹித் சர்மா இந்த ஆண்டு இதுவரை மூன்று போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம்.
ஆனால், அதை நேரடியாக சொல்லாமல் ஹர்திக் பாண்டியா அவருக்கு காயம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால், ரோஹித் சர்மா மிகப்பெரிய ஆளுமை என்பதால் அவரை இப்படி பிளேயிங் லெவனிலிருந்து நீக்குவதெல்லாம் அவருக்கு ஏற்படுத்தும் அவமானம் என அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிக்கு அருகே வந்து தோல்வி அடைந்தது. ரோஹித் இல்லாத நிலையில்துவக்க வீரர்களாக இறங்கிய வில் ஜாக்ஸ் 5 ரன்களும், ரியான் ரிக்கல்டென் 10 ரன்களும் மட்டுமே எடுத்தனர். அதனால் ரோஹித் சர்மாவை நீக்கியது குறித்த விமர்சனம் மேலும் வலுப்பெற்றது.
2024 ஐபிஎல் தொடருக்கு முன்பு ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியிருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அப்போதே அவரது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். அதன் பின் ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடன் ரோஹித் சர்மா சுமூகமாக சென்றதால் அவரது ரசிகர்களும் அடங்கினர்.
ஆனால், தற்போது ரோஹித் சர்மாவை பிளேயிங் லெவனிலிருந்து நீக்கி இருப்பதை எடுத்து அவர்கள் மீண்டும் பொங்கி எழத் தொடங்கியுள்ளனர். இதில் மற்றொரு சர்ச்சையும் உள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு முந்தைய தினம் லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகிர் கானுடன் ரோஹித் சர்மா பேசிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் "தான் இதுவரை செய்ய வேண்டியது எல்லாம் சரியாக செய்து விட்டேன், இனி இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை" என்று கூறியிருந்தார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் எல்லாவற்றையும் சரியாக செய்தும் தன்னை ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இவ்வாறு கூறினார் என ரசிகர்கள் ஊகித்து வந்தனர்.
சரியாக அந்த வீடியோ வெளியான மறுதினம் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இந்த இரண்டு சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் எனவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.