மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். இதன் மூலமாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரையும் ஓரம்கட்டியுள்ள சூர்யகுமார் யாதவ், மும்பை அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் 2வது இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 32 பந்துகளில் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 54 ரன்களையும் விளாசி அசத்தினர்.

இந்த போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக சூர்யகுமார் யாதவ் ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி இருக்கிறார். 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 427 ரன்களை விளாசி அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதேபோல் இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மேலும் 2 சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்களை எட்டிய போது, ஐபிஎல் தொடரில் 4 ஆயிரம் ரன்களை விளாசி சாதனை படைத்தார். 145 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 2 சதங்கள், 26 அரைசதங்கள் உட்பட 4 ஆயிரம் ரன்களை விளாசி உள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 2,714 பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை விளாசி இருக்கிறார். மறுபக்கம் கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகிய இருவரும் 2,653 மற்றும் 2,658 பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். இதன் மூலமாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை விடவும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி இருப்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் மும்பை அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் சர்மா 5,698 ரன்களுடனும் இருக்கிறார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் 3,413 ரன்களுடன் 2வது இடத்திலும், பொல்லார்ட் 3,412 ரன்களுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.