அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மழையால் நீண்ட நேரம் தாமதமாகியது. இந்த நிலையில், இந்தப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
தற்போது அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் போடப்பட்டது, அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், அதன் பிறகு மழை பெய்ததால் போட்டி திட்டமிடப்பட்ட நேரத்தில் துவங்கவில்லை.

ஒருவேளை இந்தப் போட்டி இன்று நடத்தி முடிக்க முடியவில்லை என்றால், பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இது பலருக்கும் ரிசர்வ் நாள் விதி பற்றி குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், 2024 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இருந்தது. அதேபோல, 2025 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டபோது, அப்போதும் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ரிசர்வ் நாள் இல்லை என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ஏன் இந்த மாற்றம் என சிலர் குழப்பத்தில் உள்ளனர். 2025 ஐபிஎல் தொடர் கடந்த மே மாதம் தேதி இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மே 17 முதல் போட்டிகள் தொடங்கின. இந்த இடைவெளியால் மீண்டும் போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.
அப்போது பிளேஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு இடையே அதிக நாள் இடைவெளி விட முடியாது என்பதால், பிளேஆஃப் போட்டிகள் மிகவும் நெருக்கமாக அட்டவணையில் திட்டமிடப்பட்டன. அதனால், பிளேஆஃப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் இல்லை என பிசிசிஐ முடிவு எடுத்தது.
அதற்காகவே மழை பெய்யாத மைதானங்களாகப் பார்த்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் திட்டமிடப்பட்டன. கொல்கத்தாவில் தான் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியும், இறுதிப் போட்டியும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அங்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்ததால்தான் அகமதாபாத் மைதானத்தில் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது அகமதாபாத் மைதானத்திலும் மழை பெய்து வருகிறது. அதனால் போட்டி தாமதமாக இருக்கிறது. போட்டி மழையால் கைவிடப்பட்டால், புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி, 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். நான்காம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.