அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு 3 கேட்ச் வாய்ப்புகளை குஜராத் அணி கோட்டைவிட்ட நிலையில், இந்த போட்டியிலும் பஞ்சாப் அணியின் ஓமர்சாய் ஒரு கேட்சை கோட்டைவிட்டார். ஆனாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி காரணமாக ரோஹித் சர்மா வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அகமதாபாத்தில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இறுதியாக மழை நின்றபின், 9.45 மணிக்கு ஆட்டம் தொடங்கப்பட்டது.
மும்பை அணி தரப்பில் ரோஹித் சர்மா - பேர்ஸ்டோவ் கூட்டம் தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் இருவரும் நிதானம் காட்டிய நிலையில், ஜேமிசன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோவ் அபாரமாக சிக்சரை விளாசினார். ஆனால் அதே ஓவரில் ரோஹித் சர்மா அடித்த பந்து உயரத்தில் பறக்க, சரியாக கணித்து ஓடிய ஓமர்சாய் கடைசி நேரத்தில் கேட்சை கோட்டைவிட்டார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் இருந்ததாக பார்க்கப்பட்டது.
குஜராத் அணிக்கு எதிரான் எலிமினேட்டர் போட்டியிலேயே ரோஹித் சர்மாவுக்கு ஏராளமான கேட்ச்களை அந்த அணியின் ஃபீல்டர்கள் கோட்டைவிட்டனர். இதனை பயன்படுத்தி ரோஹித் சர்மா 80 ரன்களை குவித்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். இதனால் மீண்டும் பஞ்சாப் ஃபீல்டர்களும் கேட்சை கோட்டைவிட்டதால், அதே அதிர்ஷ்டம் ரோஹித் சர்மா பக்கத்திலேயே பாய் போட்டு படுத்துவிட்டதாக பார்க்கப்பட்டது.
ஆனால் பிட்சில் வேகத்தை குறைத்து பவுலிங் செய்ய வேண்டும் என்பதை உடனடியாக உணர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், உடனடியாக 3வது ஓவரை வீசுவதற்கு ஸ்டாய்னிஸை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரிலேயே ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பால் வீச, அதனை புல் ஷாட் அடித்தார். அது சிக்ஸ் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நேராக வைஷாக் விஜயகுமார் கைகளில் சென்று விழுந்தது. இதனால் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் ரோஹித் சர்மா பக்கம் அதிர்ஷ்டம் இருந்தாலும், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் சிறந்த அறிவு இருப்பதாக பாராட்டுகள் பெற்று வருகிறது. இதனால் பஞ்சாப் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனென்றால் ரோஹித் சர்மா களத்தில் இருந்திருந்தால், மும்பை அணியின் ஸ்கோர் பவர் பிளேவுக்குள் எங்கோ உயர்ந்திருக்கும்.