மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் மும்பை அணிக்காக அறிமுகம் செய்யப்பட்ட விக்னேஷ் புத்தூர் பவுலிங் பலரையும் ஈர்த்தது. சிஎஸ்கே அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் விக்னேஷ் புத்தூருக்கு பெரியளவில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஆனாலும் ஸ்பின் பிட்ச்களில் விக்னேஷ் புத்தூர் களமிறக்கப்பட்டு வந்தார். மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடிய அவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் புத்தூருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கரண் சர்மா கைகளில் காயம் ஏற்பட்ட போது, மும்பை அணியின் ஒரேயொரு ஸ்பின்னராக விக்னேஷ் புத்தூர் மட்டுமே இருந்தார். இதனால் வில் ஜாக்ஸை முதன்மை ஸ்பின்னராக மும்பை அணி பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக விலகி இருப்பதால், இளம் வீரர் ஒருவரை மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ரகு சர்மாவை மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. லெக் ஸ்பின்னரான ரகு சர்மா பஞ்சாப் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இதுவரை 11 முதல் தர போட்டிகள், 9 லிஸ்ட் ஏ போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய ரகு சர்மா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் மட்டும் 5 முறை 5 விக்கெட்டுகளையும், 3 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். இதனை முன்பே அறிந்த மும்பை அணி நிர்வாகம், ரகு சர்மாவை மும்பை அணியின் வலைப்பயிற்சி பவுலராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதில் சிறப்பாக செயல்பட்டு வந்ததையடுத்து ரகு சர்மாவை மும்பை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ரகு சர்மாவுக்கு மும்பை அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கரண் சர்மா ஏற்கனவே லெக் ஸ்பின்னர் என்பதால், இவர் பெஞ்சில் இருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.