மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. வான்கடே போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானத்தில், அதிரடியான பேட்ஸ்மேன்களை மும்பை அணி பவுலர்கள் தடுத்து நிறுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை மும்பை அணி எப்படி சாத்தியப்படுத்தியது என்பதை பார்க்கலாம்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 300 ரன்களை விளாசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். அதிலும் டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 28 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 21 பந்துகளில் 19 ரன்களையும் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிக்சர்களுக்கு பெயர்போன் ஐதராபாத் அணி, இந்த போட்டியில் 18வது ஓவரில்தான் முதல் சிக்சரையே விளாசியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 39 டாட் பால்களை விளையாடி இருக்கிறார்கள். அதேபோல் 14 பவுண்டரி, 5 சிக்ஸ் மட்டுமே அடித்திருக்கிறார்கள். இதனால் மும்பை அணியின் பவுலர்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் போட்டியின் மூலமாக ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று அனைத்து அணிகளுக்கும் மும்பை அணி ப்ளூபிரிண்ட் போட்டு கொடுத்துள்ளது. இந்த போட்டியின் போது மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் பேசுகையில், ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஹேண்ட் - ஐ ( Hand - Eye Coordination ) மூலம் ஷாட்களை ஆடும் வீரர்களாக இருக்கிறார்கள்.
இதனால் மும்பை அணியின் பவுலர்கள் ஒரே வேகத்தில் வீசாமல், வேகத்தை மாற்றி மாற்றி வீச திட்டமிட்டுள்ளோம். அதேபோல் பவுன்சர், லெந்த் பால்கள், யார்க்கர், ஸ்லோயர் பால்கள், ஸ்விங் என்று ஒவ்வொரு ஓவரிலும் வெவ்வேறு வகையான பால்களை வீசவும் திட்டம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். இதனால் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்தும் வேறு வேறாக வந்ததால், ஷாட்களை ஆட முடியாமல் திணறினர்.
இதன் காரணமாகவே ஐதராபாத் அணியை வான்கடே மைதானத்திலேயே மும்பை அணியால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. அதேபோல் தொடக்கம் முதலே இந்த திட்டத்தை செயல்படுத்தியதால், ரன்கள் அடிக்க முடியவில்லை என்ற அழுத்தம் அதிகரித்தது. அதன்பின் டாட் பால்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, பேட்ஸ்மேன்களும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் வரும் போட்டிகளிலும் மற்ற அணிகள் இதே திட்டத்துடன் ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.