கொரோனா பரவல்
ஐபிஎல் 2021 தொடர் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கி 25 போட்டிகளை கடந்துள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படும் சூழலில் பயோ பபுளுக்கு உட்பட்டு வீரர்கள் பாதுகாப்பான முறையில் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தனர்.
சிஎஸ்கே அணியிலும் கொரோனா
இந்நிலையில் தற்போது கேகேஆர் வீரர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல சிஎஸ்கே வீரர்கள் அல்லாத 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பயோ பபுளை மீறி கொரோனா உள் நுழைந்தது வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடரிலிருந்து விலகிய ஆஸி வீரர்கள்
முன்னதாகவே ஆடம் சம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆன்ட்ரூ டை உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஆர் அஸ்வின் உள்ளிட்டவர்கள் ஐபிஎல்லில் இருந்து முற்றிலும் விலகி பயோ பபுளில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆயினும் ஆஸ்திரேலியாவின் பயணக் கட்டுப்பாடு காரணமாக தங்களது நாட்டிற்கு செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தொடர்ந்து ஆஸி வீரர்கள் உள்ளனர்.
நாடு திரும்ப தடை
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கிழக்கு நாடுகள் வழியாக ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதற்கான வாய்ப்பை கண்டுபிடித்த ஆஸ்திரேலிய அரசு, அவ்வாறு வந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு முக்கியம்
இந்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் வர்ணனை செய்துவரும் ஆஸ்திரேலிய வர்ணனையாளர் மைக்கேல் ஸ்லாட்டர் ஆஸ்திரேலிய அரசின் இத்தகைய கெடுபிடிகளை கடுமையாக சாடியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களை நாடு திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் கைகளில் உள்ளது
தங்களுடைய ரத்தம் ஆஸ்திரேலிய பிரதமர் கைகளில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தங்களை இவ்வாறு நடத்தக்கூடாது என்றும் குவாரன்டைன் விதிமுறைகளை கையாண்டு தங்களை நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஐபிஎல்லில் பணிபுரிய அரசின் அனுமதி பெற்றே தாங்கள் வந்ததாகவும் ஆனால் தற்போது அரசு தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.