ஒன்லி 2 விக்கெட்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஐந்தாம் நாள் தாமதம்
இந்த சூழலில் நான்காம் நாளான நேற்று, போட்டி தொடங்கும் நேரத்தில், சவுத்தாம்ப்டனில் சாரல் மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதால் போட்டி தொடங்கப்படவில்லை.
திட்டமிட்டப்படி நடக்குமா?
ஏற்கனவே, முதல் நாள் ஆட்டம் ரத்து. நான்காம் நாள் ஆட்டம் ரத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் வானிலை காரணமாக சீக்கிரமாக முடித்துக் கொள்ளப்பட்டது என உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஒட்டுமொத்தமாக 180 ஓவர்கள் கூட முழுதாக நடக்கவில்லை. இந்த நிலையில் தான் இன்று ஐந்தாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டப்படி நடைபெறுமா என்று கேள்வி எழுந்திருக்கிறது.
மைக்கேல் வாகன் ட்வீட்
இந்த பரபரப்பான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டரில், "இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வடக்கே நடந்திருந்தால், ஒரு ஓவர் கூட பாதிக்கப்பட்டிருக்காது. இந்நேரத்துக்கு நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார். தொடக்கத்தில் இருந்தே, பைனலில் நியூசிலாந்து தான் வெற்றிப் பெறும் என்று உறுதியாக கூறி வருகிறார் வாகன். அதையே சற்று காட்டமாக கூறிவருகிறார். காரணம், அவர் எந்த கருத்து சொன்னாலும், இந்திய ரசிகர்கள் அவரை வச்சு செய்வது தான். அதுபோலத் தான் இன்றும் அவரது டீவீட்டுக்கு ரசிகர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.