கொரோனா பாதிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜி மற்றும் மைக்கேல் ஹசி ஆகியோருக்கு ஒரே நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் சிகிச்சைப்பெற்று வந்த மைக்கேல் ஹசி அதன்பிறகு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரை குணமாக்கி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் பெரும் பிரச்னைகளை சிஎஸ்கே அணி எதிர்கொண்டது.
ஹசியின் அனுபவம்
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனுபவத்தை மைக்கேல் ஹசி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடருக்கு கிளம்புவதற்கு முன்னர் நிறைய யோசனைகள் என்னுள் ஓடியது. ஏன் உலகின் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடக்கூடாது என்றெல்லாம் யோசனை வந்தது. ஆனால் எனது பணி எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் தைரியமாக சிஎஸ்கே அணிக்காக பெர்த் நகரத்தில் இருந்து புறப்பட்டேன்.
கடும் காய்ச்சலில் சிக்கினேன்
குவாரண்டைன் காலத்தின் போது, நான் ஒரு தனி அறையில் அடைக்கப்பட்டேன். யாராலும் உள்ளே, வெளியே செல்ல முடியாது. கதவிற்கு வெளியில் உணவு வைத்துவிடுவார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்த போது நான் மோசமாக உணர்ந்தேன். காய்ச்சலால் மிகவும் சோர்வாக இருந்தது. இரவு தூங்கி விழிப்பதற்குள் குறைந்தது 4 சட்டைகளை மாற்றிவிடுவேன். ஏனென்றால் அவ்வளவு வியர்வை ஊற்றியுள்ளது. நான் சில பணிகளுக்காக மேஜையில் உட்காருவேன். ஆனால் உடனடியாக சோர்வடைந்து உறங்க தோன்றும். இதனால் நேரம் எப்போது ஓடும் என்பதை எதிர்நோக்கிக்கொண்டே இருந்தேன்.
Recommended Video
மோசமான சூழல்
என்னை பரிசோதித்த மருத்துவர்கள் ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்திருப்பார்கள். அதாவது உலகின் மிகவும் மோசமான சூழல் நிலவும் இடத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என அவர்கள் யோசித்திருப்பார்கள். ஏனென்றால் டெல்லியில் அப்போது கொரோனாவின் தாக்கம் மிகவும் மோசமாக இருந்தது. மருத்துவமனைகளின் வாயில்களில் கூட்டம் அலைமோதி வந்தன. அவற்றை பார்க்கும் போது மனம் வலித்தது. ஆனால் இறுதியாக நான் அதிர்ஷ்டசாலி என்று தான் கூறுவேன். ஏனென்றால் என்னைவிட மோசமான சூழல்களில் பலர் இருந்தனர் என மைக்கேல் ஹசி கூறினார்.