லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இதன் மூலம் பிசிசிஐ செய்து வந்த மெகா தவறு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் இளம் வீரர்களை அடையாளப்படுத்தும் ஒரு தொடரை பிசிசிஐ கொரோனாவுக்கு பிறகு நடத்தாமல் விட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டில் தற்போது திறமைக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம்.

ஒரு இடத்திற்கு ஆறு ஏழு பேர் கடுமையாக போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. அந்த வகையில் டெஸ்ட், டி20 மற்றும் ஒரு நாள் என மூன்று கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனி அணிகளை உருவாக்கும் அளவுக்கு இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் பிசிசிஐ டி20 போட்டியில் விளையாடும் அதே வீரரை ஒரு நாள் போட்டிக்கும், டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக விளங்கி வந்தார். அவரை தேவையில்லாமல் டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்து அவருடைய உத்வேகத்தை குலைத்து விட்டார்கள்.
இதேபோன்று டி20 யில் சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவை தேவையில்லாமல் டெஸ்ட் போட்டிகளில் சேர்த்தார்கள். அடுத்த நட்சத்திர வீரராக வரும் அனைத்து தகுதியும் சுப்மன் கில்லுக்கு இருக்கிறது. ஆனால் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஏற்படுத்திய தொடக்கத்தை டெஸ்ட் போட்டியில் அவர் வெளிப்படுத்த தடுமாறி வருகிறார்.
இப்படி ஒரே வீரரை மூன்று கிரிக்கெட் வடிவத்திற்கும் பிசிசிஐ ஏன் பயன்படுத்தி வருகிறது என்று கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு பதிலாக ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்திருக்கும் சப்ராஸ்கான், ஈஸ்வரன், ஹனுமா விகாரி போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பே வழங்கவில்லை. அவ்வளவு ஏன் ரஞ்சி கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி அசத்திருக்கிறார். அவரையாவது டெஸ்ட்க்கு என தனியாக பயன்படுத்தலாம். இப்படி ஒவ்வொரு கிரிக்கெட்டுக்கும் ஒவ்வொரு அணியை பிசிசிஐயால் தயார் படுத்த முடியும்.
ஆனால் ஒரே வீரர்களுக்கு அனைத்து கிரிக்கெட்டிலும் அவர்கள் வாய்ப்பு தருவதால் திறமையான பலன் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய ஏ அணியை வெளிநாட்டுக்கு பிசிசிஐ சுற்றுப்பயணம் செய்ய அனுப்பவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய ஏ அணி எங்கேயும் வெளிநாட்டுக்கு செல்லவில்லை. ஆனால் வருமானமே இல்லாத நியூசிலாந்து ஏ அணி இங்கு வந்து இந்திய ஏ அணியுடன் விளையாடி இருக்கிறது.
இது போன்று இளம் வீரர்களை தேர்வு செய்து வெளிநாட்டுகளில் இந்திய ஏ அணி தொடர்களை அடிக்கடி நடத்தினால் மட்டுமே அடுத்த தலைமுறையில் சிறந்த வீரர் யார் என்பதை நம்மால் தேர்வு செய்ய முடியும்.சர்பராஸ் கான் ஈஸ்வரன் போன்ற வீரர்கள் எல்லாம் வெளிநாட்டு மண்ணில் எப்படி விளையாடுகிறார்கள் என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியும் இந்த தவறுகளை எல்லாம் சரி செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்திய அணி கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக விளங்கும்.