பார்படாஸ்: ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கும் இந்திய வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ததாக கூறிய ரோகித் சர்மா, எதற்காக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான அணியை கட்டமைப்பதற்கான பணிகளில் ரோகித் சம்ரா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக உலகக்கோப்பை தொடருக்கு முன் விளையாடப்படும் 10 முதல் 12 ஒருநாள் போட்டிகளை பயன்படுத்தி கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களை தேர்வு செய்ய ஒருநாள் தொடர்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடி உள்ளனர்.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் இருவரும் காயமடைந்துள்ளனர். அதேபோல் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டர் என்பதால், அவரும் இந்திய அணியில் நிச்சயம் இருப்பார். இதனால் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.
இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வழக்கம் போல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெறும் 114 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டது.
பின்னர் அந்த 115 ரன்கள் இலக்கை விரட்டுவதற்காக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி வேறு தங்களின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தனர். இந்த காமெடி ஒரு பக்கம் இருக்க, ஆட்டம் முடிவடைந்த பின் இந்திய அணிக்கு திரும்பிய வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே தங்களின் பேட்டிங் வரிசையை மாற்றினோம் என்று ரோகித் சர்மா பேசியது நகைச்சுவையின் உச்சம்.
அப்படி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டுமென்றால் டாஸ் வென்ற போதே பேட்டிங்கை தேர்வு செய்து வாய்ப்பு வழங்கி இருக்கலாம். மிடில் ஆர்டர் பேட்டர்களான சூர்யகுமார், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் நல்ல பயிற்சியாக அமைந்திருக்கும். இதனால் ரோகித் சர்மாவின் பேச்சிற்கும், செயல்பாடுக்கும், கேப்டன்சிக்கும் பெரியளவில் வித்தியாசம் இருப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.