பெங்களூரு: திருமணம் முடிவடைந்து 4 நாட்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மீண்டும் இந்தியாவுக்கு வந்து டெல்லி அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்.
16வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 4 போட்டியில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் வெற்றிபெற கட்டாயத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. முதல் 2 போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் வீரர், 3வது போட்டியில் சொந்த காரணங்களால் விளையாடவில்லை.

அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் திருமணம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி கிரேட்டா மேக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை ஏப்ரல் 9ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, மிட்செல் மார்ஷ் மற்றும் கிரேட்டா மேக் இருவரும் ஆஸ்திரேலியாவின் கிரேஸ்டவுன் பகுதிக்குச் சென்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மிட்செல் மார்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மிட்செல் மார்ஷ் டெல்லி அணியில் இணைய நீண்ட வாரங்கள் பிடிக்கும் என்று ரசிகர்கள் கருதி வந்தனர்.
ஆனால் திருமணம் முடிவடைந்த 4வது நாளிலேயே ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்டு, இந்தியா வந்துள்ளார் மிட்செல் மார்ஷ். இன்று டெல்லி அணி வீரர்களுடன் மிட்செல் மார்ஷ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். திருமணம் முடிவடைந்து தேனிலவு கூட செல்லாமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மிட்செல் மார்ஷ் வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மிட்செல் மார்ஷின் வரவால், டெல்லி அணி மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. டெல்லி அணி நாளை ஆர்சிபி அணியுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.