லண்டன்: இந்திய அணியின் பவுலிங் அட்டாக் அனைத்து அணிகளுக்கும், அனைத்து ஆடுகளத்திலும் சவால் அளிக்கக் கூடியது என்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். அதேபோல் ஷமி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு டியூக் பால்கள் கைக்கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா இல்லாததால், முகமது ஷமி மற்றும் சிராஜ் மட்டுமே முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்த வருகின்றனர். ஆனால் ஆஸி. முன்னாள் வீரர்களோ, இந்திய பவுலிங் அட்டாக் யாருக்கும் சளைத்ததல்ல என்று அதிகபடியாக புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய அணியில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஷமி மற்றும் சிராஜின் திறமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல் இருவரின் பவுலிங் ஸ்டைலுக்கும் டியூக் பந்துகள் சிறப்பாக கைகொடுக்கும் என்றே நினைக்கிறேன்.
அதேபோல் ஸ்பின்னர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அனைத்து ஆடுகளங்களிலும் சிறப்பாக பந்துவீசும் வீரர்களை வைத்திருக்கிறார்கள். அதனால் இந்திய அணியை பவுலிங் அட்டாக் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆடுகளம் பற்றிய கேள்விக்கு, இதுவரை ஓவல் மைதான ஆடுகளத்தை நான் பார்க்கவில்லை.
ஆனால் இங்கிலாந்தில் சம்மர் சீசன் தொடங்கியுள்ளதால், நிச்சயம் ஆடுகளம் உலர்ந்திருக்கும். அதனால் நிச்சயம் கடைசி இரு நாட்களில் ஸ்பின்னர்கள் ஆட்டத்தை முடிவு செய்ய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார். லண்டனில் கடந்த சில நாட்களாக அதிகளவில் வெயில் இருந்தது. ஆனால் இன்று திடீரென மீண்டும் குளிர்காற்று வீசுவதால், ஆட்டத்தில் ஒரு ஸ்பின்னருக்கே வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.