முதல் ஒருநாள் போட்டி
நியூசிலாந்து தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, வங்கதேச தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இதற்காக ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற சீனியர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் ப்ளேயிங் 11-க்குள் வருவதால் பெரிய பலம் கூடும். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது.
ஷமி திடீர் விலகல்
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி திடீரென தொடரில் இருந்தே முற்றிலும் விலகினார். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டெஸ்ட் தொடரிலும் இருக்க மாட்டார் எனக்கூறப்படுகிறது. ஷமிக்கு மாற்றாக இளம் வீரர் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார்.
பவுலிங் குழப்பம்
இந்நிலையில் ஷமியின் விலகலால் பவுலிங் படையை தேர்வு செய்வதில் ரோகித்திற்கு சிக்கல் உண்டாகியுள்ளது. அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா போன்ற சீனியர்களும் இல்லை. தற்போதைக்கு இருக்கும் ஒரே அனுபவ வீரர் தீபக் சஹார் தான். எனவே அவர் நிச்சயம் இடம் பெறுவார். 2வது பவுலிங் தேர்வாக ஷர்துல் தாக்கூர் இருப்பார். ஏனென்றால் அவர் பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் பயன்படுவார்.
குல்தீப் சென்
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென் கவனம் ஈர்க்கிறார். உள்நாட்டு தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஐபிஎல்-லும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவரை பயன்படுத்தி பார்க்க தான் இந்த தொடருக்கே தேர்வு செய்யப்பட்டார். அப்படி பார்த்தால் உம்ரான் மாலிக்கின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
முக்கியமான வாய்ப்பு
ஒருவேளை உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு தர வேண்டுமென்றால் ஷர்துல் தாக்கூர் தான் நீக்கப்பட வேண்டும். குல்தீப் சென் புதிய வீரர் என்பதால், அவரின் பவுலிங் அட்டாக்கை எதிர்கொள்ள வங்கதேசம் தடுமாறும். இந்த வாய்ப்பை இழக்க நேரிடும். இதனால் ஷர்துல் தாக்கூர், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகிய 3 பேரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் எழுந்துள்ளது.