பெங்கால்: ரஞ்சி டிராபி 2025-26 அரையிறுதி போட்டியில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி ஒரே இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஷமி அண்மையில் பிசிசிஐயின் ஊதிய ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த சூழலில் கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அதற்கு ஒரு கட்டு மட்டும் போட்டு கொண்டு ஷமி அபாரமாக பந்துவீசி அசத்தினார்.
ஜம்மு காஷ்மீருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 90 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஷமி தனது சிறந்த பந்துவீச்சுப் பதிவை நிகழ்த்தினார். கலியாணியில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் பெங்கால் அணிக்கு 26 ரன்கள் முக்கியமான முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் பெற்றுத் தந்தார்.

35 வயதான ஷமி, 2024 நவம்பரில் காயத்திலிருந்து மீண்டதிலிருந்து உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தச் சீசனில் 12 இன்னிங்ஸ்களில் அவர் 36 விக்கெட்டுகள் வீழ்த்தி, நடப்பு ரஞ்சி சீசனின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
2025 தொடக்கத்தில் டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி மூலம் சர்வதேச அணிக்கு ஷமி சிறிது காலம் திரும்பினார். எனினும், அதன்பிறகு இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. 64 டெஸ்ட் போட்டிகள் ஆடிய அவர், மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதியுடன் இருக்கிறாரா என்று தேர்வுக் குழுவுக்க சந்தேகம் நிலவுகிறது.
ஷமி 2025 இல் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடர்களுக்கும், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்பால் தொடருக்கும் பரிசீலிக்கப்படவில்லை. தொடர்ச்சியான புறக்கணிப்பட்டாலும், தொடர்ந்து போர் குதிரை போல் ஷமி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.
சீசனின் தொடக்கத்தில் குஜராத்துக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய பிறகு, "கடின உழைப்பு தேவை, அதிர்ஷ்டமும் ஒரு பங்கு வகிக்கிறது. நான் மீண்டும் தயாராக இருக்கிறேன். எனினும் எனது கையில் எதுவும் இல்லை. இந்திய ணியில் இடமில்லை என்றால் பெங்கால் அணிக்காக விளையாடுவேன்" என்று ஷமி கூறியிருந்தார்.
ஒரு கட்டத்தில், ஷமியில் உடல் தகுதி குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில், என்னுடைய உடல் தகுதி எப்படி இருக்கிறது என்று அகர்கரிடம் சொல்வது என் வேலை கிடையாது. உடல் தகுதி இல்லாமல் ரஞ்சி டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட முடியும் என்று காட்டமாக பதில் அளித்தார். இதனால் ஏற்பட்ட மன கசப்பால், அகர்கர் சமியை தொடர்ந்து ஓரம் கட்டுவதாக செய்திகள் வெளியகியுள்ளன.