மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.
இல்லையென்றால் மற்ற அணிகளின் உதவி இருந்தால் மட்டுமே இந்தியா பைனலுக்கு செல்லும். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலான காரியம்.

இந்த சூழலில் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவே கொஞ்சம் தடுமாறினார். சிராஜ் போன்ற வீரர்கள் எல்லாம் விக்கெட்டுகள் எடுக்க சிரமப்பட்டனர். இதனால் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் அனுபவ வீரரான ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஷமிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் அந்த செய்தி தற்போது வந்திருக்கிறது.
முகமது ஷமி தற்போது காயத்திலிருந்து குணமடைந்து விட்டதாகவும் தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்கும் வகையில் வரும் புதன்கிழமை மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் பெங்கால் அணி சார்பாக ஷமி களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஷமி உடல் தகுதியை எட்டி விட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்களும் அனுமதி அளித்து விட்டார்கள். இதனால் ரஞ்சிப் போட்டியில் விளையாடி தன்னுடைய உடல் தகுதியையும் திறமையும் நிரூபித்து விட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷமி பங்கேற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் ஷமி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்ப கூடும். கடந்த 2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஷமி கடைசியாக விளையாடும் நிலையில் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது அவர் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பி இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.