மும்பை : ரோகித் சர்மாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவருடைய இன்னொரு முகத்தை பார்க்க நேரிடும் என்று முகமது சமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா தலைமை ஏற்று இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது.
அதன் பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றி இந்தியா சாதனைகள் படைத்தது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான சியாட் விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முகமது சமி, ரோகித் சர்மாவின் இன்னொரு முகத்தை பற்றி பேசினார். ரோகித் சர்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றால் அவர் நமக்கு முழு சுதந்திரத்தை அளிப்பார். ஆனால் அதே சமயம் அவருடைய எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்யவில்லை என்றால் அவ்வளவுதான்.
நீங்கள் தொலைக்காட்சியில் ரோகித் சர்மாவின் ரியாக்ஷனை அடிக்கடி பார்க்கலாம். அதை பார்த்த உடனே நாங்கள் ரோகித் சர்மா மனதில் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய போராடுவோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய ஸ்ரேயாச், சமி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
ரோகித் சர்மா முகத்திற்கு நேராக எதையும் திட்ட மாட்டார். நாங்களே அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் விளையாடுவோம். சில சமயம் அவர் என்ன பேசுகிறார் யாரைக் குறை சொல்கிறார் என்பதை அவருடைய நடவடிக்கை வைத்து நாங்கள் புரிந்து கொள்வோம்.
அவருடன் நாங்கள் பல ஆண்டுகள் விளையாடி இருப்பதால் எங்களுக்கு இது எளிதாகி விட்டது என்று கூறினார். அப்போது குறிப்பிட்டு பேசிய ரோஹித் சர்மா தான் எப்போதுமே வீரர்களை நீங்கள் நீங்களாக இருங்கள் என்று கூறுவேன். அப்படி இருக்கும் போது நானும் நானாக இருந்தால் தானே சரியாக இருக்கும் என்று கூற அரங்கமே சிரிப்பலையில் நிரம்பியது.