கிண்டல் பண்ணிட்டா.. டென்ஷன் ஆகிடுவார் - பும்ரா இவ்ளோ சீரியஸ் ஆளா?
டெல்லி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்தும், சக பவுலர்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் முகமது ஷமி.
ஒரு காலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து யூனிட் என்றால், எதிரணி வீரர்கள் வெளியே காட்டிக் கொல்லாமல் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு மிதமான அட்டாக் கொண்டிருந்த யூனிட் நம்முடையது.
ஆனால் இந்த 2k era-வில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. ஜாகீர் கான், அகர்கர், நெஹ்ரா என்று சமாளிக்கத் தொடங்கினோம். தோனி தலைமையிலான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான வாய்ப்பு ட்ரிபிள் ஆனது. பல பவுலர்கள் களமிறக்கப்பட்டனர்.அவற்றில் குறிப்பானவர்கள் முகமது ஷமி, புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர். இந்த 'டெட்லி காம்போ' இப்போது உலக அணிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

சீரியஸ் பும்ரா
இந்த நிலையில், சமீபத்தில் cricbuzz தளத்துக்கு பேட்டி அளித்துள்ள ஷமி, தனது சக பவுலர்கள் குறித்து சுவாரஸ்யமாக பேசியுள்ளார். அதில், "நான், இஷாந்த், புவனேஷ், உமேஷ் ஆகியோர் ஒருவருக்கொருவர் பயங்கரமாக கிண்டல் செய்து கொள்வோம். ஒருவருக்கொருவர் வாரிக் கொள்வோம். நான் அதை ரசிப்பேன். ஆனால், பும்ரா சற்று வித்தியாசமானவர். அவர் அதிகம் ஜோக் அடிக்க மாட்டார். சில சமயம் நாம் அவரைப் பற்றி அடிக்கும் ஜோக்குகளை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்வார். ஆனால், பும்ரா தவிர்த்து மற்ற நாங்கள் நால்வரும் ஒன்று சேர்ந்தால் அங்கு அதகளம் தான்" என்றார்.

நோ டிஃபன்ஸ்
மேலும், "நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஒரு யூனிட்டாக விளையாடி வருகிறோம். எங்களில் எத்தனை பேர் அன்றைய தினம் அணியில் விளையாடினாலும், யாராவது ஒருவரது பந்துவீச்சில் தாக்கம் இல்லையென்றால், மற்றவர்கள் அட்டாக் செய்யும் விதமாக ஒதுங்கிவிடுவோம். இது ஒரு சிறந்த தற்காப்பு பணியாகும். ஒட்டுமொத்தமாக எங்கள் அனைவரின் எண்ணமும் அட்டாக் செய்வதே தவிர்த்து, தற்காத்து ஆடுவதில் அல்ல" என்றார்.

மிட்-ஆன் ஃபீல்டர்
தொடர்ந்து பேசிய ஷமி, "எங்களது ஒவ்வொரு மீட்டிங்கிலும் நான் திரும்பத் திரும்ப சொல்வது ஒரே விஷயம் தான். நான் பந்துவீசினால், mid-on-ல் நிற்கும் ஃபீல்டர், மிகச் சிறப்பாக பந்துகளை கையாள்பவராக இருக்க வேண்டும். எனது பவுலிங்கில் பந்து அதிகம் செல்லும் திசை அங்கு தான்" என்றார்.

20 பேர் கொண்ட அணி
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த நீண்ட நெடிய டூருக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் ஷமி உட்பட 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications