மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுவதும், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்த விவகாரத்தில் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். மேலும், ரோஹித் சர்மா நீக்கத்தை பற்றி மீம்ஸ் போட்டு விமர்சிக்கக் கூடாது எனவும் ஷமி தனது வீடியோவில் பேசி இருக்கிறார். "மீம்ஸ் போடுவதை நிறுத்துங்கள், இது தேர்வுக்குழுவின் முடிவு, அதை மதியுங்கள்," என்று அவர் கூறி இருக்கிறார்.

ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து, தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது ஷமி, சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
"இந்தக் கேள்வியை வைத்து நிறைய மீம்ஸ்கள் வருகின்றன. இதில் எந்தவிதமான எதிர்ப்பும் இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இது பிசிசிஐ, தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் முடிவு. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்த முடிவையும் ஷமி முழுமையாக ஆதரித்துப் பேசினார். "சுப்மன் கில் இங்கிலாந்தில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். எனவே, அவருக்குக் கேப்டன்சி அனுபவம் இருக்கிறது. யாராவது ஒருவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தாக வேண்டும். பிசிசிஐ அந்தப் பொறுப்புக்கு சுப்மன் கில்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. எனவே, நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஷமி கேப்டன்சி மாற்றத்துக்கு விளக்கமளித்தார்.
கேப்டன்சி மாற்றம் என்பது கிரிக்கெட்டில் ஒரு இயல்பான சுழற்சி என்பதை வலியுறுத்திய ஷமி, இதுகுறித்து ரசிகர்கள் தேவையில்லாமல் கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். "கேப்டன்சி குறித்து மக்கள் கேள்வி எழுப்பக் கூடாது. இது நம் கைகளில் இல்லை. இன்று ஒருவர் கேப்டனாக இருக்கிறார், நாளை வேறொருவர் வருவார். இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்" என்று அவர் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ஒரு கேப்டனை மாற்றியது குறித்து ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால், ஒரு மூத்த வீரராக முகமது ஷமி, இந்த மாற்றத்தை ஒரு நடைமுறை கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார். 2027 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, ஒரு இளம் கேப்டனைத் தயார்படுத்துவது அவசியம் என்ற தேர்வுக்குழுவின் முடிவுக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது ஷமிக்கு இடம் கிடைக்காதபோதும், அணியின் நலன் கருதி, தேர்வுக்குழுவின் முடிவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது, அவரது முதிர்ச்சியையும், அணி மீதான பற்றையும் காட்டுவதாக சில ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.