மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்பினால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தான் ஆபத்து என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் உண்மையான ஆப்பே வேறு நபருக்கு தான் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஆறு போட்டியிலும் விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், கில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி ஆகியோர் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள். இந்த நிலையில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா அணிக்குள் திரும்பினால் ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையான சிக்கலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு தான் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்றதால் சிராஜின் பந்துவீச்சு சொதப்பல் வெளியே அவ்வளவாக தெரியவில்லை. விளையாடிய 6 போட்டிகளில் சிராஜ் ஆறு விக்கெட்டுகளை தான் எடுத்திருக்கிறார். மேலும் எக்னாமியும் மிக சொதப்பலாக இருக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டார் என்பதால் தான் ஷமி இடத்தில் அவர் இருந்தார். தற்போது ஷமி தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொண்டதால் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் முகமது சிராஜ் வெளியே அனுப்பப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக ஷர்துல் தாக்கூருக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை வீழ்த்த மீண்டும் அஸ்வினின் உதவியை ரோகித் சர்மா நாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருந்தால் ஸ்ரேயாஸை விட முகமது சிராஜ் தான் வழி விட வேண்டும் என்ற ஆலோசனை ஏற்கனவே இந்திய அணி நிர்வாகம் மத்தியில் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.