லண்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்களுடைய பிளேயிங் லெவனின் மூன்று வீரர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசார் கோரிக்கை விடுத்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நாளை தொடங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டிக்கு மழை காரணமாக ஆட்டம் தடைபட்டால் கூடுதலாக ஒரு ரிசர்வ் டேவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ரோகித்துக்கு கோரிக்கை வைத்துள்ள மாண்டி பனேசர் ,இங்கிலாந்தில் உள்ள இந்த ஒரு ஆடுகளத்தில் தான் நீங்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளரை வைத்து விளையாட நினைப்பீர்கள். ஏனென்றால் இங்கு பந்து கொஞ்சம் பவுன்ஸ் ஆகும், சுழற் பந்துவீச்சாளருக்கு சாதகமாகவும் செயல்படும். என்னை பொறுத்தவரை லண்டன் ஓவல் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் இருக்கும்.
இங்கு நிலவும் சூழல் நிச்சயமாக இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். அதற்கு அவர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாட வேண்டும். நாம் ஏற்கனவே ஆஸ்திரேலியா வீரர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட சிரமப்படுவதை பார்த்திருக்கிறோம். தற்போது லண்டனில் கோடை காலம் நிலவுகிறது. இங்கு நடைபெற்ற டி20 ஆட்டங்களில் சுழற் பந்துக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டதை நாங்கள் பார்த்தோம்.
இந்த ஆட்டம் நான்கு நாட்கள் வரை நீடிக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். இதனால் ஆடுகளத்தில் புற்கள் இருக்காது என நினைக்கிறேன். இந்திய அணி எந்த வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த போகிறது என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். இந்திய அணி அனைத்து வகையிலும் பலமாக தான் இருக்கிறது.
கூடுதலாக பேட்டிங் வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் அஸ்வின் ஜடேஜா உடன் களமிறங்குவார்கள். என்னை பொறுத்தவரை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் தான் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் 140 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஐந்து ஓவர்களை வீசும் வீரர் அவர் மட்டும்தான். இங்கிலாந்தில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் இது போன்ற கூடுதல் வேகம் உங்களுக்கு தேவை என்று மாண்டிபனேசார் கூறியுள்ளார்.