வெறும் '31' ஐபிஎல் மேட்ச்.. நடத்தாம விட்டா.. பிசிசிஐ பாக்கெட்டில் '2500' கோடி காலி!
மும்பை: ஐபிஎல் 2021 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சூழலில், அதனை மீண்டும் தொடங்கியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் பிசிசிஐக்கு ஏற்பட்டிருக்கிறது.
Recommended Video
என்ன சொல்வது.. ஒருபக்கம் கொத்து கொத்தாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். இவர் இறந்துட்டாரா? என்னது.. அவர் இறந்துட்டாரா? என்று செல்போன் சிணுங்கும் போதெல்லாம், நாம் அதிர்ச்சியடையும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
மறுபக்கம், இந்திய கிரிக்கெட் நிர்வாகமோ, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஐபிஎல் தொடரை, எப்போது மீண்டும் தொடங்குவது, எப்படி தொடங்குவது என்று தவித்து வருகிறது.

67 கோடி
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு ஐபிஎல் தொடரையும் நடத்தியதில் பிசிசிஐ பார்த்த வருமானம் ரூ.4,000 கோடி. அதவாது, ஒரு போட்டிக்கு சராசரியாக 67 கோடி. அதுவும், ஒரு போட்டியில் கூட பார்வையாளர்கள் இல்லாமல். இந்த ஆண்டும் அதே அளவுக்கான வருமானத்தை பிசிசிஐ எதிர்பார்த்தது. ஆனால், மொத்தமுள்ள 60 போட்டிகளில், 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதனை நடத்தாமல் விட்டால் ரூ.2000 கோடி இழப்பு ஏற்படும் சூழல் உள்ளதாம்.

1000 கோடி இழப்பு
அதாவது, பி.சி.சி.ஐ.யின் வருவாய் பாதிப்பு ஐ.பி.எல்லின் central reserve pool பங்களிப்புகளில் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஐ.பி.எல்லில் இருந்து பி.சி.சி.ஐ பெறும் வருமானம் central reserve pool-க்கு மாற்றப்படுகிறது, பின்னர் இது பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் உரிமையாளர்களிடையே சமமாக பகிரப்படுகிறது. நடப்பு சீசனில், எட்டு ஐபிஎல் உரிமையாளர்களும் ரூ .2,000 கோடி வருவாயைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பாதி போட்டிகள் ஆபத்தில் இருப்பதால், எட்டு அணிகளும் central reserve pool-ன் வருவாயில் குறைந்தபட்சம் ரூ .1,000 கோடியை இழக்க நேரிடும்.

40 கோடிக்கும் மேல்
அதுமட்டுமின்றி, ஐபிஎல் அணிகளின் மற்றொரு கவலை, பல்வேறு நிறுவனங்களுடனான அவர்களின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள். ஒவ்வொரு ஐபிஎல் அணியும், அதன் ஸ்டார் வேல்யூ மற்றும் பாப்புலாரிட்டி அடிப்படையில், தங்கள் அணி ஜெர்சிகளில் நிறுவனங்களின் பெயர்களைக் காண்பிக்க ஸ்பான்சர்களிடமிருந்து பல கோடி ரூபாய்களைப் பெறுகிறது. ஜெர்சி அல்லது வீரர்களின் ஹெல்மெட், பேட் போன்ற இதர பொருட்களில் ஸ்பான்சர் லோகோ எங்கு வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அணிகள் ரூ .40 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.

பாதி வருமானம் காலி
எட்டு உரிமையாளர்களும் இந்த ஸ்பான்சர்ஷிப்களிலிருந்து ஆண்டுக்கு ரூ .500 கோடி வரை சம்பாதிக்கிறார்கள், இது டிஜிட்டல் உரிமைகள் விற்பனையை மேம்படுத்துவதால் இந்த ஆண்டு சுமார் 600 கோடி ரூபாய் வருமானம் இதன்மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பான்சர்ஷிப்களால் பி.சி.சி.ஐ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. இப்போது 31 போட்டிகளும் நடத்தப்படவில்லை எனில், இந்த வருமானத்தில் பாதி குறையலாம்

பிரம்மாண்ட பிஸ்னஸ்
நாம, 'இன்னும் 31 மேட்ச் மிச்சமிருக்கு.. எங்க நடத்தப் போறாங்களோ.. சிஎஸ்கே மீண்டும் அதே ஃபார்முல இருக்குமோ என்னமோ' என்று புலம்பிக் கொண்டிருக்க, அந்த 31-க்கு பின்னால் இத்தனை கோடி பிஸ்னஸ் இருக்கிறது என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. பிசிசிஐ ஏன் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்பது இப்போதாவது புரிகிறதா?


Click it and Unblock the Notifications