ஐபிஎல் போட்டியின்போது கொல்கத்தா வீரரை சந்தித்த 'புக்கிகள்': திடுக் தகவல் அம்பலம்!
மும்பை: ஐபிஎல் போட்டிகளின்போது, சூதாட்ட தரகர்கள் கொல்கத்தா அணி வீரர் மோர்னே மோர்க்கலை சந்தித்ததாக தகவல் பரவியுள்ளதால் ஐபிஎல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. விறுவிறுப்பாக நடந்த ஐபிஎல் 7வது சீசனின், பைனலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டித்தொடர் முடிவடைந்தாலும் இன்னும் ஐபிஎல் மீதான பரபரப்பு அடங்கவில்லை. ஆனால் இந்த பரபரப்புக்கு காரணம், சிக்சரும், ஃபோரும் கிடையாது, புக்கிகள்தான் இதற்கு காரணம்.

அரபு நாட்டில் குதிரை பேரம்
மக்களவை தேர்தல் நடைபெற்றதன் காரணமாக, ஐபிஎல் பந்தையங்களின் முதல் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்தப்பட்டன. அங்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் மோர்னே மோர்க்கலை சூதாட்ட தரகர்கள் சிலர் சந்தித்து பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து மோர்னே மோர்க்கலே, ஐபிஎல் ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

முழு அதிகாரம் அளிக்கப்படும்
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "இதுகுறித்த விரிவான அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ஊழல் ஒழிப்பு பிரிவு இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. ஒருவேளை சூதாட்ட தரகர்கள் அணுகியது உண்மைதான் என்றால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க ஊழல் ஒழிப்பு குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது" என்றார்.

ஆலோசித்துவருகிறோம்
மும்பையில் நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்த சர்ச்சை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது உண்மைதான் என்றார்.

கிரிக்கெட்டில் கேரண்டி இல்லை
மேலும் அவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் என்றால் மக்களுக்கு கிரிக்கெட் மட்டுமே நினைவுக்குவர வேண்டும். தேவையில்லாதது நினைவுக்கு வந்துவிடக்கூடாது. இதற்காக நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். ஆனால் மனிதர்களால் எதற்கும் கேரண்டி கொடுத்துவிட முடியாது.

அணுக முடியாது
அனைத்து அணிகளுடனும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை அனுப்பி வைக்கிறோம். அவர்களை மீறி அணி வீரர்களை யாரும் தொலைபேசியில் கூட அழைத்து பேசிவிட முடியாது. வீரர்களை புக்கிகள் அணுகாமல் இருக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி பயிற்சி அளித்துள்ளோம் என்று கவாஸ்கர் கூறினார்.


Click it and Unblock the Notifications