1989ல் துவங்கிய பயணம்
சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளங்களாக பலர் இருக்கின்றனர். இதில் சினிமா பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் மக்களின் அதிகமான கவனத்தை பெற்று விடுகின்றனர். அன்றாட சலிப்பான வாழ்க்கையில் இவர்கள் அளிக்கும் பொழுதுபோக்கு மக்களுக்கு அவர்களின்பால் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த வகையில் கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படும் சச்சின் குறித்த பார்வை இது.
டெஸ்ட் போட்டியில் அறிமுகம்
கடந்த 1989 நவம்பர் 15ல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சாதனை பயணத்தை துவக்கினார் சச்சின் டெண்டுல்கர். அவருடைய 16வது வயதில் துவங்கியது இந்த பயணம். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான 3வது இளம் வீரர் என்ற பெருமையும் மிகவும் இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்த 3வது இளம் வீரர் என்ற பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு.
30 ஆண்டு சாதனை பயணம்
தன்னுடைய 11வது வயதில் கிரிக்கெட்டை ஆடத் துவங்கிய சச்சின் டெண்டுல்கள் சர்வதேச போட்டிகளில் அடுத்த 5 வருடங்களில் அதாவது 16வது வயதில் விளையாடத் துவங்கிவிட்டார். தற்போது இவர் தனது கிரிக்கெட் பயணத்தை துவங்கி 30 வருடங்களை கடந்து விட்டார். ஆயினும் தற்போதும் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
அதிகபட்ச ரன்கள்
இவரது பல்வேறு சாதனை பயணங்கள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை கடந்த இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. இதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 34,357 ரன்களை இவர் கடந்து சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் வரலாற்றில் இவர் அதிகபட்சமாக 15,921 ரன்களை குவித்துள்ளார். இதில் 51 சதங்கள் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள்
இதேபோல, ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 18,426 ரன்களை குவித்துள்ளார். இதில் 49 சதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக அவர் குவித்துள்ள ரன்கள் 15,310. சச்சின் டெண்டுல்கர் அடித்து ஆடினால், அந்த போட்டி கண்டிப்பாக வெற்றிதான். அந்த வகையில் இந்திய அணி 78.43 சதவகிதம் வெற்றியை அவரது அதிரடி ஆட்டத்தின்கீழ் சுவைத்துள்ளது.
6 ஆண்டுகளில் சாதனை
ஒரு காலகட்டத்தில் சச்சின் எதை செய்தாலும் அது சாதனையாக மாறியது. ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கும் அதிகமான ரன்களை எடுத்த ஒரே வீரர் சச்சின். கடந்த 1997, 1999, 2001, 2002, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த சாதனையை வேறு எந்த பேட்ஸ்மேனும் எட்டவில்லை.
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது
விளையாட்டு வீரராக சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு கடந்த 1994ல் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கடந்த 1997ல் விளையாட்டின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் முறையே கடந்த 1999 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளிலும் பெற்றுள்ளார்.
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன்
கடந்த 2013 நவம்பர் 16ம் தேதி இவர் தனது ஓய்வை அறிவித்த நிலையில், இவருக்கு பாரத ரத்னா விருதும் பரிந்துரைக்கப்பட்டது. ராஜ்யசபா எம்பியாகவும் பணிபுரிந்துள்ளார் சச்சின். எந்தவித பின்புலமும் இல்லாமல் இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய கேரியரில் 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 200 டெஸ்ட் போட்டிகள் அடக்கம்.