சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 7வது வெற்றியை பெற்று 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 167 ரன்களை மட்டுமே எடுத்தது.
எனினும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியை 14 ரன்களில் சுருட்டினர். இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேப்டன் தோனி, நாங்கள் பந்து வீசும் போது ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பியது.

பந்தில் சீமை பயன்படுத்தி எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் வீசினார்கள். நான் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களிடம் உங்களுடைய சிறந்த பந்தை மட்டும் வீசுங்கள். விக்கெட்டை எதிர்பார்த்து செயல்பட வேண்டாம் என்று கூறியிருந்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. எனினும் எங்கள் பேட்டிங் வரிசை இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.
இந்த ஆடுகளத்தில் சில ஷாட்டுகளை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் ஆடிய இரண்டு ஷாட் முறை தவறானது. அதிலும் கொஞ்சம் மாற்றம் தேவைப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் மோயின் அலியும் ஜடேஜாவும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது நல்லது என நினைக்கிறேன்.
ஏனென்றால் இறுதி கட்டத்தை எட்டும் போது அணியில் இருக்கும் பலரும் கொஞ்சமாவது பந்துகளை எதிர்கொண்டு இருக்க வேண்டும். என்னுடைய பணி சில பந்துகளை எதிர் கொண்டாலும் அதில் ரன்களை குவிக்க வேண்டும். என்னை தயவு செய்து அதிகமாக ஓட வைக்காதீர்கள்.
எவ்வளவு பந்துகளை சந்திக்கிறேனோ அதில் அணியின் வெற்றிக்காக என்னுடைய பங்களிப்பை கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதைத்தான் நான் பயிற்சியிலும் செய்து வந்தேன் என தோனி கூறினார். இன்றைய ஆட்டத்தில் 19வது ஓவரில் தோனியும் ஜடேஜாவும் இணைந்து 21 ரன்கள் சேர்த்தார்கள். இது ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.