சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, டாஸ் போடும்போது மைதானத்தில் இருந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். இதனால் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப் தடுமாறினார்.
இந்த போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் அடுத்து தோனி பேசும் போது சென்னையில் திரும்பி விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நாங்கள் பெரிய அளவில் சென்னையில் போட்டிகளில் விளையாடியது கிடையாது.

வெறும் ஐந்து, ஆறு சீசன் தான் இங்கு விளையாடி இருக்கிறோம். சில போட்டிகளில் பார்வையாளர்கள் முழுமையாக இருக்க மாட்டார்கள். சில கேலரிகள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக முழு மைதானமும் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. சென்னையில் நாங்கள் 7 போட்டிகளில் விளையாடுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இது நிச்சயம் எனக்கு பெரிய விஷயமாகும். நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயித்து களத்தில் விளையாடுவதில்லை. சில சமயம் ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும். இதற்கு ஏற்ப நாமும் நமது இலக்கை மாற்றிக் கொண்டு வர வேண்டும். எந்த இலக்கு சரியாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதனை நோக்கி விளையாடுவதே சிறந்த விஷயமாகும்.
நாங்கள் இன்றைய ஆட்டத்தில் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. அதே 11 வீரர்களை வைத்துதான் விளையாடுகிறோம் என்று தோனி கூறினார். இதற்கு முன் பேசிய கே எல் ராகுல் எந்த இலக்கை நாங்கள் துரத்த போகிறோம் என்பதை தெரிந்து கொள்வதற்காக பந்துவீச்சை தேர்வு செய்ததாக கூறியுள்ளார் .டெல்லிக்கு எதிராக எங்களது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இதேபோன்று இன்றைய ஆட்டத்திலும் நாங்கள் சரியாக விளையாட வேண்டும். கடந்த ஆட்டத்தை விட இன்றைய ஆட்டத்தில் செயல்பாடு அதிகரிக்க வேண்டும். எங்களது அணியில் உனாட்கட்டுக்கு இன்று வாய்ப்பு இல்லை. அவருக்கு பதிலாக யாஷ் தாக்கூர் களமிறங்குகிறார் என்று கே எல் ராகுல் கூறியுள்ளார்.