அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி அடித்த ஒரு சிக்சர், ரசிகர்களை 10 ஆண்டுக்கு முன் அழைத்து சென்றது. டாசை இழந்த சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இதில் கான்வே 1 ரன்னில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணியின் ருதுராஜ், மொயின் அலி ஆகியோர் அதிரடியாக விளையாடினார்.
மொயின் அலி ஆட்டமிழந்த உடன், ஸ்டோக்ஸ், ராயூடு ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் ஒரு முனையில் ரன்கள் வறண்ட தொடங்கின. ஆனால் ருதுராஜ் மட்டும் தனி ஆளாக நின்று 9 சிக்சர், 4 பவுண்டரிகள் அடித்து 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிவம் துபே கேதர் ஜாதவின் தம்பி போல் விளையாடினார். ஒரு பந்து மட்டும் எதிர்சையாக பேட்டில் பட்டு சிக்சர் சென்றது. ஜடேஜாவும் பெரிய ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். 12.5 ஓவரில் சிஎஸ்கே அணி 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 19 ஓவரில் சிஎஸ்கே 165 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் கடைசி இன்னிங்சில் பெரிய ஷாட் ஆட வேண்டிய பொறுப்பில் சிஎஸ்கே இருந்தது. அப்போது களத்தில் நின்ற 41 வயதான தோனி என்ன செய்யப் போகிறார் என ஹேட்டர்கள் கிண்டல் செய்த நிலையில், ஜாஸ் லிடடில் வீசிய ஒரு பந்தை பளார் என தோனி சிக்சருக்கு அடித்தார். இது பழைய தோனியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

அத்துடன் நிற்காமல் ஒரு பவுண்டரியையும் தோனி அடித்தார். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் செல்ல, சிஎஸ்கே அணி 178 என்ற கௌரவான இலக்கை எட்டியது. இதனால் தோனி முன் கூட்டியே களத்திற்கு வந்திருக்கலாம் அல்லவா என்ற ரசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.