2 போட்டிகளில் வெற்றி
ஐபிஎல் 2020 தொடரில் சொதப்பிய சிஎஸ்கே அணி தற்போது கோப்பையை வெல்லும் தீவிரத்துடன் இந்த சீசனில் களமிறங்கியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் மட்டுமே தோல்வியுற்று மற்ற இரு போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.
3வது இடத்தில் சிஎஸ்கே
இதையடுத்து ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது. மேலும் இன்றைய 15வது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்றுள்ள சிஎஸ்கே ஹாட்ரிக் வெற்றியை தொடர அதன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சொதப்பலான பேட்டிங்
கடந்த 3 போட்டிகளிலும் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் சிறப்பாக பேட்டிங்கை அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் அவர் சொதப்பலான ஆட்டத்தை அளித்துள்ளார். கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் மட்டும் 18 ரன்களை அடித்திருந்தார்.
பிரையன் லாரா கருத்து
இந்நிலையில், தோனி பேட்டிங்கில் இருந்து சிறிது ஓய்வு எடுக்கட்டும் என்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். தோனி கீப்பிங் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்துவரும் நிலையில், பேட்டிங்கில் அதிகமான செயல்பாட்டை காண்பிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெனக்கெட தேவையில்லை
சிஎஸ்கேவில் பேட்டிங் ஆர்டர் நீண்டு காணப்படுவதாகவும், சாம் கர்ரன் உளிளட்ட வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள லாரா, அதனால் தோனி அதிகமாக பேட்டிங்கிற்காக மெனக்கெட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.
கோப்பையை வெல்ல முயற்சிக்கலாம்
தன்னுடைய கேப்டன்ஷிப்பை சிறப்பாக மேற்கொண்டு இந்த சீசனில் கோப்பையை வெல்ல தோனி முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் லாரா தெரிவித்துள்ளார். அணியில் தனிப்பட்ட வீரர்களின் செயல்பாட்டை கண்காணித்து அவர்களை சிறப்பாக பயன்படுத்தும் முயற்சியில் தோனி ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளார்.