துபாய்: இந்திய அணியை காப்பாற்ற கேப்டன் டோணி ஸ்பெஷலாக எதையாவது செய்தாக வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐசிசி வெப்சைட்டில் பிளமிங் எழுதியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ்சில் நானும் ஒரு உறுப்பினர் என்றவகையில், டோணியை எனக்கு நெருக்கமாக நன்கு தெரியும். டோணி இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

டோணி இனிமேல்தான் தனது திறமையை காண்பிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில், சிக்சர் அடித்து வெற்றி பெற்று பேட்டை தூக்கியபோதே அவரது திறமையை உலகம் பார்த்துவிட்டது. ஆனால், முக்கியமான ஒரு தொடரில், டோணி எதையாவது சிறப்பாக செய்தாக வேண்டும்.
கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில், அணி தத்தளித்த நேரத்தில் வேறு பேட்ஸ்மேன்களை நம்பாமல், டோணி முன்கூட்டியே பேட் செய்ய களமிறங்கி வந்தார். வெற்றியை அணிக்கு பெற்றும் தந்தார். டோணி எந்த ஒரு வரிசையிலும் இறங்கி ஆடும் திறமை உள்ளவர் என்பது இந்திய அணிக்கு பலமாகும். இவ்வாறு பிளமிங் கூறியுள்ளார்.