மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பேஸ்புக்கில் தோனி எப்போதுமே பதிவு போடுவதை விரும்ப மாட்டார்.
இந்த நிலையில் திடீரென்று அந்த முகநூல் பக்கத்தில் இருந்து ஒரு பதிவு வந்தது. அதில் புதிய சீசன் புதிய பொறுப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தோனி பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தோனி ஒருவேளை கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டு அணியின் பயிற்சியாளராக இருக்கப் போகிறாரா என்று சந்தேகம் இருந்தது. மேலும் சிலர் தோனி தொடக்க வீரராகத்தான் களமிறங்க போகிறார் என்று கூறினர். ஏனென்றால் கான்வே காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து தோனி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்தை வெளியிட்டு வந்தனர்.
ஆனால் அது எதுவுமே கிடையாது. இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தோனி இதுபோல் பலமுறை பல கருத்துக்களை கூறிவிட்டு கடைசியில் அது விளம்பரம் என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் போது தான் செய்தியாளர்களை சந்திக்க போவதாகவும் முக்கிய விஷயம் குறித்து பேச இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தபோது, அது ஓரியோ பிஸ்கட்டிற்கான விளம்பர யுக்தி என்று பிறகு தெரிய வந்தது. இதுபோன்ற தோனி பலமுறை ரசிகர்களுடன் விளையாடி இருக்கிறார். இதனால் இம்முறையும் தோனி ரசிகர்களை வைத்து காமெடி செய்ய போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது.
ரசிகர்களை வைத்து செய்யப்படும் விளம்பர யுக்தியை தோனி ஒருபோதும் செய்யக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்களை முட்டாளாக்கும் முயற்சியை விளம்பர நிறுவனங்களும் செய்யக்கூடாது என்றும் அதற்கு தோனி துணை போக கூடாது என்றும் தொடரும் வலியுறுத்தியுள்ளனர்.