கோலாகல துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்கொண்ட ஆர்சிபி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நேற்றைய இரண்டாவது போட்டியில் இளம் கேப்டன் ரிஷப் பந்த்தின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோதிய சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
பிரித்வி -ஷிகர் அபாரம்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவர்களையும் விளையாடி 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் பார்ட்னர்ஷிப்பில் 138 ரன்களை குவித்தனர்.
வெற்றியுடன் துவக்கம்
பிரித்வி ஷா அதிரடியாக 38 பந்துகளில் 72 ரன்களையும் ஷிகர் தவான் 54 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19வது ஓவரிலேயே இலக்கை அடைந்து டெல்லி கேபிடல்ஸ் தன்னுடைய ஐபிஎல் கணக்கை வெற்றியுடன் துவக்கியுள்ளது.
எம்எஸ் தோனி விளக்கம்
சிஎஸ்கே பிரித்வி ஷாவின் கேட்ச்கள் உள்ளிட்டவற்றை மிஸ் செய்தது போட்டியை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சாதகமாக்கியது. போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, முதலில் ஆடும் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் எதிரணிக்கு நெருக்கடியை அளித்திருக்கலாம். ஆனால் தங்களது அணி ரன்களை குவிக்க தவறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே மெதுவாக பந்து வீசியதாக எம்எஸ் தோனிக்கு 12 லட்சம் ரூபாயை ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது. இதை ஐபிஎல் நிர்வாகம் தனது வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கேவின் முதல் தவறு இது என்றும் குறிப்பிட்டுள்ளது.