லக்னோ : தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஓய்வு பெறுவது குறித்து மீண்டும் பேசி இருக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
லக்னோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்துள்ளோம்.

ஆடுகளத்தை தார்ப்பாயால் மூடி இருக்கிறார்கள். இதனால் பந்து முதலில் வீசும் போது ஸ்விங் ஆகும் என எதிர்பார்க்கிறேன். மேலும் மைதானத்தில் உள்ள மற்ற சூழ்நிலையை பார்த்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். எங்கள் அணியில் தற்போது தீபக்சாகர் உடல் தகுதி பெற்று மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் ஆகாஷ் சிங் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
மற்ற வீரர்கள் எல்லாம் பிளேயிங் லெவனில் அப்படியே இருக்கிறார்கள் என்று தோனி கூறினார்.அப்போது கேள்வி கேட்ட கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மாரிசன், உங்களுடைய கடைசி ஐபிஎல் சீசனுக்கு ரசிகர்கள் கொடுக்கும் பிரியா விடையை நீங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் அளித்த தோனி, இது என்னுடைய கடைசி ஐபிஎல் என்று நீங்கள் தான் முடிவு எடுத்திருக்கிறீர்கள். நான் சொல்லவில்லை என கூறிவிட்டு சிரித்தார். இதைக் கேட்டதும் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். அப்போது பேசிய டானி மாரிசன், ரசிகர்களே கேட்டுக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விளையாட லக்னோவுக்கு தோனி வருகிறார் எனக்கூறி தோனியின் ஓய்வு தொடர்பான விளக்கத்தை பிரகடனப்படுத்தினார்.
தோனியின் இந்த பேச்சு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.இதை அடுத்து தோனி அடுத்த சீசனும் விளையாடுவார் என பலரும் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது வயது 41 ஆகிவிட்டது. அடுத்த ஆண்டு 42 ஆகிவிடும். தோனியின் உடல்நலமும் கை கொடுத்தால் நிச்சயம் அவர் அடுத்த சீசனலும் விளையாடலாம்.