சென்னை : தன் கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணி கேப்டன் தோனி பேசி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இது குறித்து போட்டிக்கு பிறகு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய கேப்டன் தோனி நான் இன்று சிறப்பான ஒரு கேட்சை பிடித்தேன் ஆனால் எனக்கு ஏன் பரிசு தரவில்லை என்று கிண்டலாக கேட்டார்.

இதை தொடர்ந்து பேசிய கேப்டன் தோனி என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது கடைசி கட்டத்தில் இருக்கின்றேன். இதனால் ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் முன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
சென்னை ரசிகர்கள் எனக்கு அன்பையும் ஆதரவையும் கொடுத்திருக்கிறார்கள். போட்டி முடிந்தாலும் நான் என்ன பேசுவேன் என்று கேட்பதற்காகவே மைதானத்தில் காத்திருக்கிறார்கள்நான் எப்போதுமே பந்துவீச்சாளர்களிடம் இப்படி பில்டிங்கை நிறுத்துகிறேன், அதற்கு தகுந்த மாதிரி வீசு என்று சொல்ல மாட்டேன்.
சில சமயத்தில் சில பேட்ஸ்மேன் வித்தியாசமாக விளையாடினால் அப்போது மட்டும் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். மற்றபடி எந்த இடத்தில் எந்த பில்டர்கள் வேண்டும் என்று பந்துவீச்சாளர்களை முடிவு செய்ய முழு சுதந்திரம் வழங்குவேன். பிராவோ மட்டும் தான் பில்டர்களை நிறுத்தும் விசயத்தில் என்னுடன் சண்டை போடுவார். மலிங்கா தன்னுடைய வித்யாசமான பந்துவீச்சு முறையால் பிரபலமானார் அதேபோன்று பதிரானாவும் செயல்படுகிறார். அவர் பந்து வீசும் முறையை கணித்து அடிப்பது கடினமாகும்.
வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், இன்று பனிப்பொழிவு இருக்காது என நினைத்தேன். இதனால் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தேன். எனினும் எங்களுடைய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வெற்றி தேடி தந்தார்கள். விக்கெட் கீப்பிங்கில் ஸ்டம்பிங் செய்வதற்கு திறமை மட்டுமே இருந்தால் போதாது. சில சமயம், சரியான இடத்தில் நாம் இருக்க வேண்டும். எப்போதுமே தயார் நிலையில் கீப்பிங் செய்ய வேண்டும். இது அனுபவம் மூலம் தான் கிடைக்கும். எனக்கும் வயது ஆகிவிட்டது. அதனை மறுக்க முடியாது.