மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி தற்போது ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் தல அஜித்தை போல் தோனியும் இந்த சான்றிதழை பெற்ற பிரபலம் என்ற பெயரை பெற்றுள்ளார்.
தோனிக்கு கிரிக்கெட் மட்டுமல்லாமல் பல விஷயத்தில் ஆர்வம் இருக்கின்றது. குறிப்பாக தோனி எப்போதுமே பல சூப்பர் பைக்குகளை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறார். தனது ஓய்வு நேரத்தில் பைக் ரெய்டு செல்வது, பழமை வாய்ந்த கார்களை வாங்கி அது எவ்வாறு இயங்குகிறது என்று பார்ப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபடுவார்.

அது மட்டுமில்லாமல் தோனி ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து பயிற்சியை பெற்றிருக்கிறார். அதில் பாராசூட் மூலம் எப்படி விமானத்திலிருந்து பாய்வது உள்ளிட்ட பயிற்சிகளை தோனி பெற்றிருக்கிறார். இதுபோன்று பாதுகாப்பு படையினருடன் எல்லையில் தோனி பணி புரிந்துள்ளார்.
தற்போது தோனி மேலும் ஒரு விஷயத்தில் தன்னுடைய கவனத்தை செலுத்தி இருக்கிறார். தோனிக்கு ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் இயக்குவது குறித்து ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தோனி முறையாக பயிற்சி பெற்றிருக்கிறார். கருடா ஏரோஸ்பேஸ் என்ற இந்தியாவின் தலைசிறந்த ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் தோனி இணைந்து இருக்கிறார்.
அதில் சிறப்பு தூதராக முதலில் இணைந்த தோனி பின்பு அந்த நிறுவனத்தில் இணைந்து ஆளில்லா விமானங்களை எப்படி இயக்குவது என்று முறைப்படி கற்றுக் கொண்டிருக்கிறார். இதில் பயிற்சி பெற்ற தோனி தற்போது முறையான சான்றிதழையும் பெற்றுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் ஜெயபிரகாஷ்,"தோனி எங்கள் நிறுவனத்தின் சிறப்பு தூதராக இருக்கின்றார்."
"அது மட்டுமில்லாமல் எங்கள் நிறுவனத்தில் முதலிடம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தோனி எங்கள் நிறுவனத்தில் கீழ் பயிற்சி பெற்று தற்போது சான்றிதழையும் வாங்கி இருக்கிறார். ட்ரோன் இயக்குவதில் தோனி மிகுந்த ஆர்வம் காட்டினார்.இதனால் அது எப்படி வேலை செய்கிறது.இதை எப்படி இயக்குவது என்று முழுமையாக கவனம் செலுத்தி பயிற்சி பெற்றார்."
"கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் ட்ரோன் துறையில் பல புரட்சிகளை செய்யும் என்று தோனி நம்புவது எங்கள் அனைவருக்குமே உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. தோனி எங்களுடன் இணைந்து செயல்பட்ட போது அவர் எங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார்" என்று அவர் கூறியுள்ளார்.