சென்னை: சென்னை அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி 200வது முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இன்றையப் போட்டியில் களமிறங்க உள்ளார். இதனால் சென்னை அணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியை வென்றால் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுவதோடு, புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும். இதற்காக சென்னை அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முக்கிய வீரர்களான தீக்சனா மற்றும் பதிரானா இருவரும் சென்னை அணியில் இணைந்துள்ளனர்.

அதேபோல் சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இன்றையப் போட்டியில் சென்னையின் கேப்டனாக தோனி களமிறங்குவதன் மூலம் இன்னொரு பெருமையையும் பெறுகிறார். அதாவது சென்னை அணியின் கேப்டனாக 200வது போட்டியில் தோனி வழிநடத்த உள்ளார். சென்னை அணிக்காக 14வது சீசனில் கேப்டனாக விளையாடி வரும் தோனி, இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 11 முறை சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்குள் அழைத்து சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு கேப்டன்சியில் இருந்து தோனி விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார். ஆனால் கேப்டன்சியால் அவரது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கூடுதல் பிரஷரை உணர்ந்ததால், மீண்டும் தோனியிடமே கேப்டன்சியை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து எம்எஸ் தோனி மீண்டும் தனது அரியாசணத்தில் கேப்டனாக அமர்ந்தார்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரே, தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் சச்சினுக்கு இந்திய அணி உலகக்கோப்பை பெற்றுக் கொடுத்தது போல், தோனிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்து வழியனுப்பி வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே வீரர்கள் போராடி வருகின்றனர். சிஎஸ்கே கேப்டனாக தோனி 200வது போட்டியில் களமிறங்குவது குறித்து ஜடேஜா கூறுகையில், சென்னை கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கும் தோனிக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசாக வழங்குவோம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.