பெர்த்: மேற்கிந்திய தீவுகளுடனான போட்டி நடைபெற்ற மைதானம் மிகக் கடினமாக இருந்ததாலேயே கடுமையாக போராட வேண்டியது இருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் டோணி கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு டோணி அடித்த 45 ரன்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த வெற்றிக்குப் பின் டோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய பந்தில் இந்த ஆடுகளத்தில் ஆடுவது மிகக்கடினமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அதிக அளவு விதவிதமான பவுன்சர்கள் வீசப்பட்டன. மேற்கிந்திய தீவு வீரர்கள் புதிய பந்தில் அருமையாக ஸ்விங் செய்தனர்.
நம்முடைய பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்ய பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. சரியான லைன் மற்றும் லென்த்தாகவும் பந்து வீசவில்லை. இந்திய வீரர்கள் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்லும் வகையில் பவுன்சர் பந்துகளை வீசினார்கள். ஆனாலும், விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த ஆடுகளத்தில் இந்த இலக்கு கடினமானதுதான். மிடில் ஆர்டர் மற்றும் கடைசி தர வீரர்களுக்கு இது ஒரு நல்ல பயிற்சி. அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். கடந்த முறை நியூசிலாந்து பயணத்தின்போது அருமையான ஆடுகளம் அமைந்தது. அடுத்து நாம் விளையாடக்கூடிய ஆடுகளம் எப்படி அமைந்துள்ளது என்பதை அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும். என்ன இருந்தாலும், அங்கே வழக்கமாக பந்து பவுன்சராக கிளம்பும். மைதானம் குறுகியதாக இருப்பதால் சமாளித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு டோணி கூறினார்.
இந்தியாவுக்கு அடுத்த இரண்டு போட்டிகளும் நியூசிலாந்தில்தான் நடைபெற உள்ளன. ஹேமில்டனில் வருகிற 10-ந்தேதி அயர்லாந்தையும், 14-ந்தேதி ஆக்லாந்தில் ஜிம்பாப்வே அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.