அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த ஒரு விஷயம் அவருக்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பதிராணா பந்து வீச வந்தபோது அவர் ஆடுகளத்தில் இல்லை என்பதற்காக நடுவர்கள் அவரை பந்து வீச அனுமதிக்கவில்லை.

அவர் எவ்வளவு நேரம் ஆடுகளத்தில் இல்லையோ அவ்வளவு நேரம் களத்தில் நின்று அதன் பிறகு பந்து வீச வேண்டும் என நடுவர்கள் அறிவுறுத்தினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோனி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பதிராணா களத்தில் இருக்க வேண்டிய நேரத்தை ஈடு செய்ய தோனி நடுவரிடம் பேசி நேரத்தை வீணடித்தார். இதன் காரணமாக சுமார் 4 நிமிடம் போட்டி தடைப்பட்டது. இதன் பிறகு பதிராணா மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டார்.
இந்த விஷயத்தை ரசிகர்கள் தோனியின் ராஜதந்திரத்தை பார்த்தீர்களா என்று கொண்டாடினர். ஆனால் தோனியில் இருந்து செயலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக பிசிசிஐ ஒரு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விதிகளை மீறி செயல்பட்ட தோனிக்கு ஒரு போட்டியில் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சிஎஸ்கே இறுதிப்போட்டியில் விளையாடுவதால் தோனி இல்லை என்றால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் இந்த தடையை லீக் போட்டியில் வைத்துக் கொள்ளலாமா என்ற யோசனையிலும் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. மேலும் தடை வேண்டாம் என்றும் போட்டியிலிருந்து நூறு சதவீதம் ஊதியத்தை அபராதமாக விதித்து தோனிக்கு எச்சரிக்கையுடன் முடித்துக் கொள்ளலாம் என்றும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என தெரிகிறது. தோனிக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்றும் 100% அபராதம் தான் விதிக்கப்படும் என்றும் பி சி சி ஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.