பெங்களூரு : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது வெறும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது தோனிக்கு 41 வயது ஆகிவிட்டது.
தோனி சமீப காலமாக மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக பேட்டிங் வரிசையில் தோனி நடுவில் களமிறங்காமல் கீழ் வரிசையில் விளையாடுகிறார். அண்மையில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தோனி நடக்க முடியாமல் நடந்து சென்றார்.

இதனால் தோனி நடப்பு சீசனில் கூட முழுமையாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஐபிஎல் தொடரில் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது.
தற்போது எங்களுக்கு முன் நிறைய போட்டிகள் இருக்கிறது. நான் இப்போது ஏதாவது சொல்லிவிட்டால் அது பயிற்சியாளருக்கு கடும் அழுத்தத்தை கொடுக்கும் என்று கூறி சிரித்தார். தோனியின் இந்த பதிலை கேட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தோனி இவ்வளவு வயதிலும் தன்னுடைய பழைய அதிரடியை காட்டுகிறார்.எனினும் கிரிக்கெட்டுக்கு உடல் தகுதி மிகவும் முக்கியம்.

இதனை சரி செய்ய முடியவில்லை என்றால் தோனி நிச்சயம் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். இதனால் ஏறக்குறைய இதுதான் அவருக்கு கடைசி சீசனாக இருக்கலாம். தோனி இந்த தொடரில் பாதியிலே சென்று விட்டால், அடுத்த கேப்டன் யார்? அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற பல குழப்பங்கள் அணியில் ஏற்படும். இதனை கிண்டலாக குறிப்பிடும் விதத்திலே தோனி இவ்வாறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.