மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பல கிரிக்கெட் வல்லுனர்களும் ரசிகர்களும் கேப்டன் கூல் என்று அழைப்பார்கள். இதற்கு காரணம் பல நெருக்கடியான சமயத்தில் கூட களத்தில் பதற்றம் அடையாமல் கூலாக அனைத்து முடிவுகளையும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்.
இதேபோன்று பேட்டிங்கிலும் தோனி எந்த பதற்றமும் அடையாமல் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைப்பார். குறிப்பாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோனி, கடைசி வரை நின்று சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்று கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து ஐந்து கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். மற்ற கேப்டன்கள் எல்லாம் களத்தில் பதற்றம் அடைந்து கோபத்தில் கத்தும் நிலையில் தோனி எந்த வீரரையும் களத்தில் கோபமாக கூட பேசியது கிடையாது.
இதனால் தான் அவருக்கு கேப்டன் கூல் என்ற பெயர் பொருத்தமாக இருந்தது. இந்த சூழலில் தோனி கேப்டன் கூல் என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அதனை டிரேட் மார்க்காக பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தோனியின் வழக்கறிஞர் மணிஸ் அகர்வால் அளித்த பேட்டியில் டிரேட் மார்க் சட்ட திட்டத்தில் இது ஒரு நிகரற்ற மைல்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.
இந்த சூழலில் கேப்டன் கூல் என்ற வார்த்தையை டிரேட் மார்க் செய்யும்போது தோனி தரப்பினருக்கு பல சிக்கல்கள் வந்ததாகவும், இந்த வார்த்தை ஏற்கனவே இருக்கிறது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் தோனி களத்தில் செயல்பட்டு விதம் அவருக்கு மட்டும் தான் இந்த வார்த்தை பொருந்தும் என வாதாடி இந்த பெயரை தோனி டிரேட் மார்க்காக பயன்படுத்தி இருக்கிறார் என தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் இனி கேப்டன் கூல் என்ற வார்த்தையை தோனியின் அனுமதி இன்றி வேறு யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் கூட தோனி தோன்றிய ஒரு விளம்பரத்தில் கேப்டன் கூல் என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தோனியின் இந்த நடவடிக்கை அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் இது தேவையில்லாத வேலை என்று பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.