சிட்னி: உலக கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை என்று அறிவித்துவிட்டார் இந்திய அணி கேப்டன் டோணி.
ஆஸ்திரேலியாவுடனான, அரையிறுதி தோல்விக்கு பிறகான பரிசளிப்பு விழாவில் பேசிய டோணி "எனக்கு 33 வயதுதான் ஆகியுள்ளது. நன்கு ஓட முடிகிறது. ஃபிட்டாக உள்ளேன். எனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தேவையில்லை.

2016ல் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டிகளுக்கு பிறகு அதுகுறித்து யோசிக்கலாம்.
ஆஸ்திரேலிய அணியை அதிக ரன்கள் அடிக்கவிட்டு தவறு செய்துவிட்டோம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அரையிறுதியில் தோற்றாலும் உலக கோப்பை தொடர் முழுவதும் இந்தியா சிறப்பாகவே விளையாடியது.
உலக கோப்பை தொடங்கும்போது, இந்தியா இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடும் என்று யாரும் நம்பவில்லை. நாக்-அவுட் கட்டம் வந்த பிறகு இன்னும் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாகவே தொடர்ந்து இந்திய அணிக்கு சப்போர்ட் செய்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டோணி தெரிவித்தார்.